மும்பை : ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்தியாவின் பிரதான டி20 தொடராக கருதப்படும் சையது முஸ்தாக் அலி தொடர் நடப்பு சீசன் சாம்பியன் பட்டத்தை பஞ்சாப் அணி கைப்பற்றியது.
மொஹாலியில் நடைபெற்ற இறுதி போட்டியில் பரோடாவும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்கள் சேர்க்க , பரோடா அணி 203 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்த தொடரில் சிறந்து விளங்கியவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். உலகக்கோப்பை தொடரை ஒட்டி இந்த தொடர் நடைபெற்றதால் ரசிகர்கள் கவனம் இதில் திரும்பவில்லை. ஆனால் அடுத்ததாக டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் இந்த தொடரில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடக்க உள்ளதால், இந்த தொடரில் சிறந்து விளங்குபவர்களை கண்கொத்தி பாம்பாக ஐபிஎல் அணிகள் கண்காணித்தனர். இந்த தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்சை சேர்ந்த அராத்து வீரர் ரியான் பாராக் இருக்கிறார். அவர் இந்த தொடரில் 510 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதைப் போன்று அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் ரியான் பராக் 7 அரை சதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் திலக் வர்மா இருக்கிறார். அவர் 121 ரன்கள் அடித்தார். இதைப் போன்று இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் 40 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
இதைப் போன்று இந்த தொடரில் அதிக முறை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா இரண்டு சதம் அடித்து இருக்கிறார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரவிதேஜா 19 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். சிறந்த பந்துவீச்சு செயல்படாக ரவி தேஜா 13 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை சேர்த்து இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்பதால் சையது முஸ்தாக் அலி தொடரில் யார் சிறப்பாக விளையாடி இருக்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.