
அபார பந்துவீச்சு
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ரோஹன் கடம் (0), மணிஷ் பாண்டே (13) ஆகிய இருவரையும் தொடக்கத்திலேயே தமிழ்நாடு அணி சுருட்டியது. இதன்பின்னர் வந்த கருண் நாயர் 18 ரன்னில் ஆட்டமிழக்க, எஸ்.ஆர்.ஷரத்தை 16 ரன்னில் சாய் கிஷோர் வீழ்த்தினார். அபாரமாக பந்துவீசிய சாய் கிஷோர் 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

கடைசி நேர அதிரடி
87 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கர்நாடகா அணிக்கு, அபினவ் மனோகர் மற்றும் பிரவீன் துபே ஆகிய இருவரும் நம்பிக்கை அளித்தனர். கடைசி நேரத்தில் அபினவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் அடிக்க, ஜெகதீஷா சுஜித் டெத் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாச 20 ஓவரில் கர்நாடகா அணி 151 ரன்கள் குவித்தது.

நிதான ரன்சேர்ப்பு
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிதானமாக ரன்களை சேர்க்க தொடங்கியது. தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் (23), ஜகதீசன் (41) ரன்களும் சேர்த்தனர். இதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க தமிழ்நாடு அணி 17 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. அப்போது தமிழ்நாடு அணி வெற்றி பெற 17 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது.

ஷாருக்கானின் அதிரடி
அப்போது களமிறங்கிய இளம் வீரர் ஷாருக்கான், கர்நாடகா அணி பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவரின் அதிரடியால் ரன்ரேட் வெகு விரைவாக உயர்ந்தது. இதனால் கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. அந்த ஓவரின் முதல் பந்து பவுண்டரிக்கு செல்ல அடுத்த 4 பந்துகளில் 2 வைட்கள் மற்றும் 5 ஓட்டங்கள் கிடைத்தன. இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஷாருக்கான் சிக்ஸருக்கு விளாச 4 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன்பட்டம் வென்றது தமிழ்நாடு அணி.


Click it and Unblock the Notifications