டெல்லி: 2024 சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் டெல்லி அணி செய்த ஒரு விஷயம் டி20 கிரிக்கெட்டில் எந்த அணியும் செய்யாத சரித்திர சாதனையை நிகழ்த்தி உள்ளது. அந்த அணியின் 11 வீரர்கள் ஒரே போட்டியில் பந்து வீசி உள்ளனர். ஆனால், அதன் முடிவில் என்ன ஆனது? என்று பார்க்கலாம்.
2024 சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் குரூப் சி பிரிவில் இடம் பெற்று இருந்த டெல்லி மற்றும் மணிப்பூர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் மணிப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி ரன் குவிக்காமல் இருக்க வேண்டும் என முடிவு செய்த டெல்லி அணி பவுலர்களை மாற்றி, மாற்றி பந்து வீச வைத்தது.

ஒரு கட்டத்தில் டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி இருந்தனர். அந்த அணியின் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் ஒரு ஓவர் வீசினார். அவர் பந்து வீசிய போது வேறு ஒரு வீரர் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார். அந்த வகையில் டெல்லி அணி 11 வீரர்களையும் ஒரே டி20 போட்டியில் பந்து வீச வைத்து வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நிகழ்த்தி இருக்கிறது.
இதற்கு முன் டி20 போட்டியில் அதிகபட்சமாக ஒரு அணியின் ஒன்பது வீரர்கள் பந்து வீசி இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டெல்லி அணி முறியடித்து உள்ளது. டெல்லி அணியில் ஹர்ஷ் தியாகி, திக்வேஷ் ரத்தி, மயங்க் ராவத் ஆகியோர் தலா மூன்று ஓவர்கள் வீசினர். ஆயுஷ் சிங், அகில் சவுத்ரி மற்றும் ஆயுஷ் பதோனி ஆகிய மூவரும் தலா இரண்டு ஓவர்கள் வீசினர்.
ஆர்யன் ராணா, ஹிம்மத் சிங், ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் தலா ஒரு ஓவர் வீசினர். ஒரு ஓவர் வீசிய ஐந்து பகுதி நேர பந்துவீச்சாளர்களில் மூவர் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மணிப்பூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 18.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.