டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஏலத்தில் ரூ. 10.75 கோடிக்கு வாங்கப்பட்ட போதிலும், வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியப் பந்துவீச்சாளராக இருந்து வந்தார் நடராஜன். அந்த அணி அவரை விடுவித்துவிட்டு ஏலத்தில் மீண்டும் வாங்க முயற்சி செய்தது. ஆனால் சன்ரைசர்ஸ் அணியுடன் போட்டி போட்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ரூ. 10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார். அவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நடராஜனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் நினைத்ததற்கு மாறாக, 12 போட்டிகளில் நடராஜனுக்குப் பந்துவீசும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அதன் பிறகு நடராஜனுக்கு இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஒரு போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. அதில் நடராஜன் பந்துவீசவில்லை. அதற்கு அடுத்த போட்டியில் அவர் மூன்று ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார். அதில் 49 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அது அனைவருக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது.
இந்த நிலையில், ஹேமங் பதானி, நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். நடராஜன் காயத்தில் இருந்ததாகவும், அதில் இருந்து மீண்டு வந்தாலும் பந்துவீசும் அளவுக்கு முழு உடல் தகுதியை அடையவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
ஹேமங் பதானி அளித்த விளக்கம்: "நாங்கள் ஏன் ஒரு வீரருக்கு 11 கோடி செலவு செய்துவிட்டு அவரை வெளியே அமர வைக்க வேண்டும்? நாங்கள் அவரை மிடில் ஓவர் மற்றும் இறுதி ஓவர்களில் பந்துவீசுவதற்காகவே குறிப்பிட்டு வாங்கினோம். துரதிஷ்டவசமாக நடராஜன் முழு உடல் தகுதியுடன் இல்லை. அவர் அப்போதுதான் காயத்திலிருந்து மீண்டு வந்தார். இந்தத் தொடர் முழுவதும் அவர் காயத்துடன் தான் இருந்தார். அதனால்தான் அவர் விளையாடவில்லை," என்றார் ஹேமங் பதானி.
ஆனால், ஐபிஎல் தொடருக்கு இடையே பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன், "நடராஜன் அனைத்தையும் சரியாக செய்து வருவதாகவும், அவருக்கு டெல்லி அணியில் எங்கே இடம் அளிப்பது என்று சொல்லுங்கள்" என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சானது அப்போது சர்ச்சையாக மாறியிருந்தது.
ஏனெனில், நடராஜனுக்கு காயம் இல்லை என்கிற அர்த்தத்தில் தான் அப்போது கெவின் பீட்டர்சன் பேசியிருந்தார். மேலும், நடராஜனுக்கு டெல்லி அணியில் எங்கே இடம் அளிப்பது என அவர் கேட்டிருந்தது தான் ரசிகர்களைக் கோபப்படுத்தியது. ஆனால், இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி நடராஜனுக்கு காயம் இருந்தது; அதனால் தான் அணியில் தேர்வு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். இவர்கள் இருவர் கூறியதில் எது உண்மை என நடராஜன் தான் சொல்ல வேண்டும்.