ஜோஹன்னஸ்பர்க்:
முதலாவது 20/20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிகளே கோலோச்சி வந்த கிரிக்கெட் விளையாட்டில் முதன் முதலாக 50 ஓவர் போட்டிகள் அறிமுகமானபோது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இது எடுபடுமா என்று கேட்டவர்களும் உண்டு. ஆனால் இன்று ஒரு நாள் போட்டிகளுக்கு இருக்கிற மவுசு அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் புதிதாக 20/20 கிரிக்கெட் போட்டி தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. போட்டியிடும் இரு அணிகளும் தலா 20 ஓவர்களில் விளையாடுவதே இந்த 20/20 போட்டியாகும்.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் போட்டிகளுக்கான முதலாவது உலகக் கோப்பை போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது.
ஜோகன்ஸ்பர்க் நகரில் இன்று தொடங்கும் போட்டியிலன் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதுகின்றன.
இந்தத் தொடரில் இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. 12 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதலில் லீக் அடிப்படையில் அனைத்து அணிகளும் மோதிக் கொள்ளும். பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர்-8 பிரிவில் மோதும்.
சூப்பர்-8 பிரிவில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் அடிப்படையில் விளையாடும். இந்த இரண்டு பிரிவுகளில் முதல் 2 இடத்துக்கு முன்னேறும் அணிகள் அரையிறுதியில் மோதிக் கொள்ளும்.
அதன் பின்பு அரையிறுதியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இன்று துவங்கும் இந்தப் போட்டி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகின்றது. லீக் போட்டிகள் வரும் 15ம் தேதி வரை நடைபெறும். அதன் பின்னர் சூப்பர் 8 போட்டிகள் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும். அரையிறுதி போட்டிகள் 22ம் தேதி டர்பன் மற்றும் கேப்டவுன் நகரில் நடைபெறுகிறது.
இறுதிப் போட்டி 24ம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெறும். இன்று துவங்க இருக்கும் முதல் போட்டியில், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9-30 மணிக்கு துவங்குகிறது.
டெஸ்ட் மற்றும் 50 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டிகளை விட அதிக அதிரடியுடன் கூடியதாக இருப்பதால் 20-20 ஓவர் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இந்திய அணிக்கு கேப்டனாக டோணி நியமிக்கப்படடுள்ளார். டிராவிட், டெண்டுல்கர், கங்குலி ஆகிய மூத்த வீரர்கள் அணியில் இல்லை.
இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இந்த போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டார்கள்.
இவர்களுக்கு பதிலாக ஹர்பஜன்சிங், வீரேந்திர சேவக், இர்பான் பதான், ஜோகிந்தர் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்:
டோனி (கேப்டன்), யுவராஜ்சிங், பியூஷ் சாவ்லா, கவுதம் காம்பீர், தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், யூசுப் பதான், சேவாக், ஜோகிந்தர் ஷர்மா, ஹர்பஜன்சிங், ரோகித் ஷர்மா, ஆர்.பி.சிங், அஜித் அகார்கர், ஸ்ரீசாந்த், ராபின் உத்தப்பா.
இந்திய அணி பாகிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள 4வது பிரிவில் இடம் பெற்றுள்ளது.
சூப்பர்-8 பிரிவுக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமானால் கண்டிப்பாக ஸ்காட்லாந்தையாவது தோற்கடிக்க வேண்டும்.
பிரிவுகள்:
ஏ- பிரிவு: தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட்இண்டீஸ்
பி- பிரிவு: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே
சி- பிரிவு: இலங்கை, கென்யா, நியூசிலாந்து
டி- பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து
போட்டிகளை ஈஸ்பிஎன்-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது.