லண்டன்: டி20 போட்டியொன்றில், கிறிஸ் கெயில் 151 ரன்கள் விளாசி நாட்அவுட்டாக நின்றபோதும், அந்த அணி தோல்வியை அடைந்தது.
இங்கிலாந்து நாட்டில் நாட்வெஸ்ட் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில், சோமர்செட் அணியும், கென்ட் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கென்ட் அணி, 20 ஓவர்களில் 227 ரன்களை குவித்தது. 2வது பேட் செய்ய வந்த சோமர்செட் அணி 3.3 ஓவர்களிலேயே, 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் கிறிஸ்கெயிலின் அபாரமான சதத்தால், அந்த அணி மீண்டது. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், முதல் இரு பந்துகளையும் கெய்ல் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
மிட்சேல் கிளைடன் வீசிய அந்த ஓவரின் 5வது பந்தில் கிறிஸ் கெயிலால் ரன் எடுக்க முடியவில்லை. ஆனால், கடைசி பந்தை அவர் சிக்சருக்கு விளாசினார். இருப்பினும், சோமர்செட் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இத்தனைக்கும் கெய்ல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், 64 பந்துகளில் 151 ரன்களை குவித்திருந்தார். அதில் 15 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். ஆனாலும் சோமர்செட் தோல்வியை கிறிஸ் கெய்லால் தடுக்க முடியவில்லை.