மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் நடப்பு தொடரில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் செயல்பட்ட விதம் தரவரிசை பட்டியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், அபாரமாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் வீரர் என்று பெருமையை கடந்த 601 நாட்களாக பெற்று வருகிறார். இதற்கிடையில் சூர்யகுமார் யாதவ் கடந்த டிசம்பர் மாதத்தில் சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார்.

அப்போது கூட சூர்யகுமார் யாதவ் இடத்தை யாராலும் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 255 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். இந்தியாவுக்கு எதிராகவும் டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் அடித்திருந்தார். இதன் மூலம் சூர்யகுமார் யாதவை விட இரண்டு புள்ளிகள் அதிகமாக பெற்று டிராவிஸ் ஹெட் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
ஹெட் 844 புள்ளிகளும், சூர்யகுமார் 842 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். இங்கிலாந்து வீரர் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இந்த நிலையில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடினால் மீண்டும் அவர் முதல் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இதே போன்று பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா அபாரமான பாய்ச்சலை பாய்ந்து இருக்கிறார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா 44 இடங்கள் முன்னேறி தற்போது 24-வது இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி தற்போது 11 வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். பவுலர்களுக்கான பட்டியலில் ஆதில் ரசித் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதேபோன்று ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும், ஹேசல்வுட் மூன்றாவது இடத்திலும் ஹசரங்கா நான்காம் இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹசரங்கா முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்திய அணி அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.