வாஷிங்டன்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி தோல்வியடைந்து 24 மணி நேரம் கழித்து, அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்திய வம்சாவளி வீரர்களை அதிகம் கொண்டிருப்பதால், 'இந்தியாவின் பி டீம்' என்று செல்லமாக அழைக்கப்படும் அமெரிக்க அணிக்கு, போட்டி முடிந்த பிறகு டிரம்ப் வாழ்த்து கூறியுள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "இந்தியாவில் கிரிக்கெட் உலகக்கோப்பைய நடைபெறுவதாக இப்போதுதான் கேள்விப்பட்டேன்! அமெரிக்க அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! நம்மிடம் ஒரு பலமான அணி உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்காவும் உங்களுக்குப் பின்னால் உள்ளது!" என்று குறிப்பிட்டிருந்தார்.
சனிக்கிழமை இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்திவிட்டது. அமெரிக்க அணி தோற்றுப் போன நிலையில், போட்டி முடிந்து ஒரு நாள் கழித்து டிரம்ப் வாழ்த்து கூறியதைச் சுட்டிக்காட்டி, பல கிரிக்கெட் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறியது. அமெரிக்காவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது தனி ஒருவனாகப் போராடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தார். இதனால் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா சார்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
162 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய அமெரிக்க அணியை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது வேகத்தால் திணறடித்தார். அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, அமெரிக்க அணி 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சரிந்தது. இறுதியில் அமெரிக்க அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.
அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதனால் அந்த அணி 'இந்தியாவின் பி டீம்' என்று அழைக்கப்படுகிறது. அந்த அணியில் உள்ள இந்திய வம்சாவளி வீரர்கள்:
மோனங்க் படேல்: அமெரிக்க அணியின் கேப்டனான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
ஜஸ்தீப் சிங்: துணை கேப்டனான இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சாய் தேஜா முக்கமல்லா: தொடக்க ஆட்டக்காரரான இவர் நியூ ஜெர்சியில் பிறந்த இந்திய வம்சாவளி வீரர்.
மிலிந்த் குமார்: இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை இந்தியாவில்தான் தொடங்கினார். டெல்லி மற்றும் சிக்கிம் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சஞ்சய் பிரசாத் கிருஷ்ணமூர்த்தி: கர்நாடகாவின் 16 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடியவர்.
சுபம் சுபாஷ் ரஞ்சனே: புனேவில் பிறந்த இவர், மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய பிறகு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.
ஹர்மீத் சிங்: மும்பையில் பிறந்த இவர், இந்தியாவின் 'பி' அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிகளிலும் விளையாடியுள்ளார்.
டிரம்பின் வாழ்த்து தாமதமாக வந்தாலும், இந்திய வம்சாவளி வீரர்களைக் கொண்ட அமெரிக்க அணி, நடப்புச் சாம்பியனான இந்திய அணிக்குக் கடும் சவால் விடுத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.