T20 WC 2026: ஹர்திக் மட்டும் இருந்திருந்தா 2023-லேயே ஆஸ்திரேலியா காலி.. மட்டம் தட்டிய முகமது கைஃப்
டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் இந்த வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பரபரப்பான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையை இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா மட்டும் விளையாடியிருந்தால், அப்போதே ஆஸ்திரேலியா தோற்றிருக்கும் என்றும், இந்தியா கோப்பையை வென்றிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி
நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. ஜிம்பாப்வே போன்ற சிறிய அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும், இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்ததும் அந்த அணியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதனை விமர்சித்துள்ள முகமது கைஃப், "2023 உலகக்கோப்பையை வென்ற பிறகு ஆஸ்திரேலியா ஒரு பலம் வாய்ந்த அணி என்று அழைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர்களின் ஆட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எதிலுமே அவர்கள் சோபிக்கவில்லை. அவர்களை இனியும் பலம் வாய்ந்த அணி என்று அழைக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா இருந்திருந்தால்?
தொடர்ந்து பேசிய அவர், "2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தப் போட்டியில் மட்டும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்திருந்தால், அகமதாபாத் மைதானத்தில் ஆஸ்திரேலியா அப்போதே தோற்றிருக்கும். இந்தியா கோப்பையை வென்றிருக்கும்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2023 உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா காலில் காயம் காரணமாக விலகினார். இதனால் அவரால் இறுதிப்போட்டியில் விளையாட முடியவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்விகள்
2023 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சறுக்கி வருகிறது. 2024 டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்று கோப்பையை இழந்தது. தற்போது 2026 டி20 உலகக்கோப்பையில் குரூப் சுற்றோடு வெளியேறியுள்ளது.
மோசமான சாதனை
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணியிடம் 146 ரன்களுக்குச் சுருண்டு ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அயர்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானதால், 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாகக் குரூப் சுற்றிலேயே உலகக்கோப்பைத் தொடரிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் அருமை இப்போதுதான் புரிகிறது என்று கைஃப் கூறியிருப்பது, இந்திய ரசிகர்களிடையே 2023 உலகக்கோப்பை நினைவுகளை மீண்டும் கிளறியுள்ளது.


Click it and Unblock the Notifications