மும்பை: நாங்கள் வாயை மூட வேண்டும் என்றால் இந்திய அணி, 2026 டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இந்திய அணி, லீக் சுற்றில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வி, அரையிறுதிக்கு முன்னரே வெளியேறும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இந்திய அணி மீதான விமர்சனங்கள் கடுமையாக எழுந்துஙள்ளது. இது குறித்து பேசிய, ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில், "விமர்சனங்களுக்கு பதிலளிக்க ஒரே வழி செயலில் காட்டுவது மூலம்தான். அரையிறுதிக்குத் தகுதிபெற்று கோப்பையை வெல்வதன் மூலம் அனைவருக்கும் பதிலடியைக் கொடுங்கள். அதைச் செய்தால், அனைவரும் வாயடைப்பார்கள். விமர்சித்தவர்கள் அதே இந்திய அணியைப் போற்றுவார்கள், சூர்யகுமார் யாதவ் அல்லது அபிஷேக் சர்மாவை புகழ்வார்கள்."

"ஆனால் இப்படித்தான் இந்த களம். விஷயங்கள் நன்றாக நடக்கும்போது, அனைவரும் பாராட்டுவார்கள். தவறும் போது தாக்குவார்கள். இந்திய அணியும் மனிதர்கள்தான், அவர்களும் தவறுகள் செய்யலாம். விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களாக இருப்பதுடன், நல்லெண்ணத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
சவுத் ஆப்பிரிக்கத் தோல்விக்கு முன், இந்தியா கடந்த 28 டி20 சர்வதேசப் போட்டிகளில் 24ல் வென்று நம்பமுடியாத ஃபார்மில் இருந்தது. அரையிறுதிக்குச் செல்ல, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எஞ்சிய இரண்டு சூப்பர் 8 போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.
தோல்விக்குப் பின் எழுந்த இந்திய அணி மீதான விமர்சனங்களை ஸ்ரீகாந்த் விளக்கினார். "ஒரு வீரர் அவுட் ஆவது அல்லது அணி தோற்பது பற்றி யாரும் கடுமையாக இல்லை. போட்டியை எப்படி, ஏன் தோற்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அக்ஸர் படேல் அணியில் தேர்ந்தெடுக்கப்படாதது பற்றி அனைவரும் கடுமையாக இருந்தனர். வருண் சக்கரவர்த்தி பற்றி யாரும் கடுமையாக இல்லை, ஏனென்றால் யாருக்கும் ஒரு மோசமான நாள் வரலாம்."

"இந்திய அணியின் மீது யாரும் கடுமையாக இருக்க விரும்பவில்லை. அனைவரும் அணுகுமுறை மற்றும் அணி தேர்வை பற்றித்தான் கேள்வி கேட்கிறார்கள், குறிப்பாக அக்ஸர் படேல் போன்ற சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு வீரர் ஏன் அணியில் இல்லை என்பதில் தான் சந்தேகம்" என்று ஸ்ரீகாந்த் தனது கருத்தை முடித்தார். அக்ஸர் முதல் மூன்று ஆட்டங்களில் 13 ரன்களுக்கும் கீழ் சராசரியிலும், 6.63 எக்கானமியிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. மாறாக, வாஷிங்டன் சுந்தர் தான் ஆடிய இரு போட்டிகளிலும் விக்கெட் எடுக்கவில்லை.