மும்பை: டி20 உலக கோப்பை சூப்பர்-8 சுற்றில் இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி, சிஎஸ்கே தான் காரணம் என்று சுறி இருக்கிறார்.
பிராவோவிடம் கற்றுக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி, என்கிடி தனது நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காவிட்டாலும், 3.75 என்ற மிகச்சிறந்த எக்கனாமி ரேட்டைப் பதிவு செய்தார். இதில் 10 டாட் பால்களும் அடங்கும். அகல யார்க்கர்கள் மற்றும் ஸ்லோ பந்துகள் எனப் பலவகையான பந்துவீச்சுகளைப் பயன்படுத்தி இந்திய வீரர்களை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக எந்த இந்திய வீரரும் ஆடாததால், அழுத்தம் அதிகரித்து, இறுதியில் இந்திய அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.போட்டி முடிந்தது குறித்து பேசிய லுங்கி நிகிடி, "நான் எப்போதுமே சொல்வது போல, 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பிராவோவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தேன். அந்த ஐபிஎல் தொடர் முழுவதும், நான் அதில்தான் கவனம் செலுத்தினேன்."
"நான் விளையாடவில்லை என்பதால், அதை பயிற்சி செய்ய எனக்கு நேரம் கிடைத்தது. அதன்பிறகு தென் ஆப்பிரிக்கா திரும்பியதும், அந்த பந்தை மிகச் சரியாக வீச பயிற்சி செய்தேன். அது மெதுவான யார்க்கர் பந்தாக இருந்தாலும் சரி, அல்லது பின் லென்த் பந்தாக இருந்தாலும் சரி, அல்லது மெதுவான பவுன்சர் பந்தாக இருந்தாலும் சரி. ஒரே பந்தில் மூன்று வெவ்வேறு லென்த்துகளில் வீச முடியும். அடுத்தது என்ன வரும் என்று நீங்கள் யூகிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று அவர் தனது பந்துவீச்சு முறையை விளக்கினார்.
"ஸ்கோர்போர்டைப் பார்த்தும், அவர்களின் நிலையைப் பார்த்தும் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற பேராசைப்படுவதை விட, அழுத்தம் கொடுப்பதுதான் முக்கியம். இந்த உத்தி இன்று இரவு நன்றாக வேலை செய்தது என்று நினைக்கிறேன்," என்றார்.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை தான் எவ்வாறு ஏமாற்றினேன் என்பதையும் அவர் வெளிப்படையாகப் பேசினார். சூர்யகுமார் என்கிடிக்கு எதிராக எட்டு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். "இன்று இரவு நான் எனது லெக் கட்டர் பந்தைப் பயன்படுத்தினேன். அவர்கள் ஆஃப் கட்டர் பந்துக்காகத் தயாராக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். சூர்யா லெக் சைடில் தூக்கி அடிக்கத் தயாராவதையும் நான் பார்த்தேன். அதனால் அவருக்கு வித்தியாசமான ஒன்றைக் காட்டி, அவரை குழப்பத்தில் ஆழ்த்தினேன். அது நன்றாக வேலை செய்தது," என்று அவர் விவரித்தார்.
"எனது ஸ்லோ பந்து எனக்கு ஒரு சாதகமான நிலையை வழங்குகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் கண்ணை மூடிக்கொண்டு அடிக்க முடியாது. பவர் பிளேயில் இது வெளிப்படையாக தெரிந்தது. ஒருமுறை அவர்கள் சிந்திக்கத் தொடங்கினால், அதுவே எனது பலம். உங்கள் விருப்பங்களை யோசிக்கத் தொடங்கியதும், ஒரு பந்துவீச்சாளர் விரும்புவது அதுதான். அழுத்தம் அதிகரிக்கும்போது, நான் அடுத்து என்ன வீசப் போகிறேன் என்பதற்கு அவர்களிடம் பதில் இருக்காது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.