மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற நாடுகளை மிரட்டுவதாகவும், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்திருந்தார். இதற்கு இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், சமீபத்தில் ஜூனியர் உலகக்கோப்பையில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷியை உதாரணம் காட்டித் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச விவகாரத்தில் ஐசிசி இந்தியாவிற்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்துப் பேசிய நாசர் ஹுசைன், "வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது தவறு. இதே கோரிக்கையை இந்தியா வைத்திருந்தால் ஐசிசி ஏற்றுக்கொண்டிருக்கும்" என்று கூறியிருந்தார்.

நாசர் ஹுசைனின் பெயரைக் குறிப்பிடாமல், ஆனால் அவரது கருத்தைச் சாடும் வகையில் சுனில் கவாஸ்கர் தனது பத்தியில் எழுதியுள்ளார். "உலக கிரிக்கெட்டின் அதிகார மையமாகத் தாங்கள் இருந்த இடத்தை இந்தியா பிடித்துவிட்டதை, சில பழைய அதிகார மையங்களால் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் இந்தியா எது செய்தாலும் குற்றம் காண்கிறார்கள். இவர்கள் காமாலை கண்ணோடு பார்க்கிறார்கள்" என்று கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
பழைய வரலாற்றைத் தோண்டிய கவாஸ்கர், "2003 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேயில் விளையாட இங்கிலாந்து மறுத்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அல்ல, அந்த நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவின் கொள்கைகள் பிடிக்காததால் விளையாட மாட்டோம் என்றார்கள். அது எவ்வளவு ஒரு முட்டாள்தனமான காரணம்?
அப்போது ஐசிசி இங்கிலாந்து மீது நடவடிக்கை எடுத்ததா? இல்லை. ஏனென்றால் அப்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வாரியங்கள்தான் ஐசிசியை ஆட்டிப்படைத்தன. இப்போது இந்தியா ஆதிக்கம் செலுத்துவதைப் பார்த்து இரட்டை வேடம் போடுகிறார்கள்" என்று சாடினார்.
பாகிஸ்தான் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போதே, பாகிஸ்தானுக்கு வரமாட்டோம் என்று இந்தியா மிகத் தெளிவாகவும், முன்கூட்டியேவும் தெரிவித்துவிட்டது. அட்டவணை வெளியிடுவதற்கு முன்பே இந்தியா இதைச் சொல்லிவிட்டது. இந்திய அரசு அனுமதி அளிக்காது என்பது உலகத்துக்கே தெரியும்" என்று விளக்கினார்.
பிசிசிஐ மற்றவர்களை "புல்லி" (Bullying) அதாவது மிரட்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை வைத்து கவாஸ்கர் ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
"உண்மையான மிரட்டல் என்றால் என்ன தெரியுமா? சென்ற வாரம் நடைபெற்ற அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தானே.. அதுதான் உண்மையான மிரட்டல்.
தனி ஒருவனாக நின்று இங்கிலாந்தை அவன் மிரட்டிய விதம் பிரமிக்க வைத்தது. இதைத்தான் ஆதிக்கம் என்று சொல்ல வேண்டும். பிசிசிஐ நிர்வாக ரீதியாகச் செய்வதை மிரட்டல் என்று கற்பனையாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்" என்று கவாஸ்கர் நறுக்குத் தெறித்தாற்போல பதிலளித்துள்ளார்.
மைதானத்தில் இந்திய இளம் வீரர்கள் காட்டும் ஆதிக்கத்தைத்தான் உலகம் பார்க்க வேண்டும் என்றும், நிர்வாக ரீதியான பொறாமைப் பேச்சுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.