மும்பை: 2026 டி20 உலககோப்பையின் ஆரம்பப் போட்டிகளில் தடுமாறிய இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா, தனது கம்பேக்கிற்கு காரணம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் அடித்த அசத்தலான 55 ரன்கள், அவரை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வைத்துள்ளது.
தொடக்கத்தில் ஹாட்ரிக் டக் அவுட்டுகளையும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 15 ரன்களையும் மட்டுமே எடுத்த அபிஷேக், உடல்நலக் குறைவால் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். இந்த இக்கட்டான சூழலில், மேலும் டக் அவுட் ஆனாலும் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட அணி நிர்வாகம் அவருக்கு உறுதியளித்தது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய அபிஷேக், "நான் விரும்பியபடி தொடக்கம் அமையவில்லை. மருத்துவமனையில் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டேன். நாட்டிற்காகவும், அதுவும் உலகக் கோப்பையிலும் எனது முதல் ஆட்டத்திற்கு ஒரு சிறந்த தொடக்கத்தை நான் விரும்பினேன்," என்றார். இந்திய கிரிக்கெட்டில் இத்தகைய தொடர்ச்சியான உறுதுணை பொதுவாக கிடைப்பது அரிது.

"இருப்பினும், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உள்ளிட்ட எனது அணி வீரர்கள் எனக்குக் காட்டிய ஆதரவும், அன்பும் குறிப்பிடத்தக்கது. 'மீண்டும் டக் அவுட் ஆனாலும், அல்லது சீக்கிரமே அவுட் ஆனாலும், நீங்கள் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவீர்கள், அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருவீர்கள்' என்று அவர்கள் கூறினர். ஒரு வீரனாக அத்தகைய ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியம்," என்றார்.

"இது வெறுமனே ஒரு அணி அன்று. ஒரு குடும்பம் போல. அணியினரும் பயிற்சியாளர்களும் நான் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென உண்மையிலேயே விரும்புகிறார்கள். நான் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்," என்றும் அவர் கூறி முடித்தார். இந்திய அணி தற்போது, வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஞாயிற்றுகிழமை வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.