மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. இதை அடுத்து அந்த அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் எலைட் அம்பயர் அலீம் தார் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். பாபர் அசாமின் தேர்வு மற்றும் தலைமைப் பயிற்சியாளரின் தலையீடு ஆகியவையே இவரது விலகலுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகி உள்ளன.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முக்கியமான போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டது. வீரர்களின் சுமாரான செயல்பாட்டிற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு அபராதம் விதித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுவில் இணைந்த அலீம் தார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்வுக்குழுவில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியவில்லை என்றும், குழுவின் உள் விவகாரங்களில் தனக்கு இருந்த அதிருப்தியுமே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணி சந்தித்த சரிவுகளுக்குப் பின்னால், நிர்வாகத்திற்கு உள்ளேயும் பல பிரச்சனைகள் இருப்பதை இந்த ராஜினாமா வெளிக்காட்டுகிறது.
பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்ததில் அலீம் தாருக்குக் கடுமையான அதிருப்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் சமீபகாலமாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், அவர்களை அணியில் சேர்க்க அலீம் தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திறமையின் அடிப்படையில் மட்டுமே வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்குப் பதிலாக, விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை ஆறாவது பேட்டிங் வரிசையில் களமிறக்கலாம் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால், அவரது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு, உலகக் கோப்பைத் தொடரில் பாபர் அசாம் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

அலீம் தாரின் அதிருப்திக்கு மற்றொரு முக்கியக் காரணம், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசனின் தலையீடு ஆகும். அணியைத் தேர்வு செய்வதில் மைக் ஹெசன் அதிக ஆதிக்கம் செலுத்தியதாகவும், அவருக்கு மற்றொரு தேர்வுக்குழு உறுப்பினரான ஆக்கிப் ஜாவேத் ஆதரவளித்ததாகவும் கூறப்படுகிறது.
திறமையின் அடிப்படையில் இல்லாமல் சில வீரர்களைப் பயிற்சியாளர் தொடர்ந்து அணியில் சேர்க்க வலியுறுத்தியுள்ளார். இதனைப் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவோ அல்லது தேர்வுக்குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களோ தட்டிக் கேட்கவில்லை என்பது அலீம் தாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கருத்துகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படாததாலும், தன்னிச்சையாகச் செயல்பட முடியாததாலும் அவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

தற்போது அலீம் தாரின் விலகலை அடுத்து, பாகிஸ்தான் தேர்வுக்குழுவில் ஆக்கிப் ஜாவேத், அசாத் ஷஃபிக் மற்றும் டேட்டா அனலிஸ்ட் உஸ்மான் ஹாஷ்மி ஆகியோர் மட்டுமே உள்ளனர். அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களுக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தான் அணிக்கு, தேர்வுக்குழுவைச் சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.