அகமதாபாத்: டி20 உலக கோப்பை தொடர்பு முழுவதும் தடுமாறி வந்த அபிஷேக் ஷர்மா இறுதிப் போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் உலகின் நம்பர் ஒன் வீரராக தாம் எப்படி வந்தேன் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்.
இந்த தொடரில் அதிக ரன் குவிப்பார் என அனைவராலும், கணிக்கப்பட்ட அபிஷேக்சர்மா கடுமையான தடுமாற்றங்களை சந்தித்தார். குறிப்பாக இந்த தொடரில் அவர் தொடர்ந்து மூன்று முறை டக்அவுட் ஆனார். மேலும் உடல் நல குறைவால் ஒரு போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு தம்மீது தனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் ஒரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இன்று என்னுடைய வாழ்க்கையில் சிறந்த நாள். என்னுடைய பயிற்சியாளரும் கேப்டனும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

ஏனென்றால் எனது திறமை குறித்து எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. எப்படிப்பட்ட ஒரு அனுபவம் எனக்கு முன்பு வந்ததே கிடையாது. இந்த தொடர் முழுவதும் எனக்கு கடும் நெருக்கடியாக இருந்தது. எனினும் என்னுடைய பயிற்சியை நான் விடவே இல்லை ஒரு தருணத்திற்கு ஒரு போட்டி என்று கவனம் செலுத்தி விளையாடினேன். அப்போதும் எனக்கு எதுவுமே சுலபமாக அமையவில்லை. ஆனால் இந்த அணியை நான் அவ்வளவு நேசிக்கின்றேன்.
ஒவ்வொரு வீரர்களும் என் பின்னால் நின்று ஆதரவு அளித்தார்கள். ஆனால் எனக்குத்தான் சுலபமாக இல்லை. கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடிவிட்டு முக்கியமான கட்டத்தில் தடுமாறுகிறோமே என்ற உணர்வு இருந்தது. ஆனால் என்னுடைய அணி நிர்வாகம் என்னை ஒருபோதும் கைவிடவில்லை.ஒரு கட்டத்தில் தொடரின் நடுவே மிகவும் உணர்ச்சி வசப்பட்டு நான் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் சென்று அணியை விட்டு நீக்கி விடுங்கள் என்று கூறினேன்.

ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தார்கள். நீ எங்களுக்காக மிகப் பெரிய போட்டிகளை வென்று கொடுப்பாய். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்று கூறினார்கள். இதேபோன்று ரசிகர்களும், என்னுடைய கடினமான இந்த காலகட்டத்தில் துணையாக நின்றார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார்.