சென்னை: டி20 உலககோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு சந்தேகத்தில் உள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சில பெரிய மாற்றங்கள் அணியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
டி20 உலகக் கோப்பையின் கடந்த ஐந்து ஆட்டங்களில் இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்த டாப் ஆர்டர் எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை. இதனால், அணி மாற்றங்கள் குறித்து ஆலோசிப்பதாக பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் உறுதிப்படுத்தினார், ஆனால் எந்தப் பெயர்களையும் அவர் வெளியிடவில்லை.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அணியில் மாற்றங்கள் இருக்கலாம். எங்கள் டாப்-3 பேட்ஸ்மேன்களில் இருவர் இடது கையாளர்கள். எதிரணி ஆஃப் ஸ்பின்னருடன் உள்ளது. இது எனக்குப் பிரச்சனை இல்லாவிட்டாலும், மூன்று ஆட்டங்களில் தோற்று, முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்ததால், எந்த அணியும் இதுபற்றி சிந்திக்கும்," என்றார்.

"நாங்கள் ஆலோசித்து வருகிறோம். முடிவுகள் முன்கூட்டியே எடுக்கப்படாது; திட்டங்களைச் சீக்கிரம் வெளியிட முடியாது. எனினும், நிச்சயம் ஆலோசனைகள் நடக்கும்," என்று தெரிவித்தார்.நீண்ட காலமாக பெஞ்சில் உள்ள சஞ்சு சாம்சனுக்கு ஜிம்பாப்வே போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளன. சென்னையில் மூன்றாவது மற்றும் நான்காவது வரிசை வீரர்களுடன் அவர் நீண்ட நேரம் வலைப்பயிற்சி மேற்கொண்டார்.

இது குறித்து கேள்விக்கு பதில் அளித்த கோட்டாக், "வழக்கமாக, அபிஷேக் முதலில் வலைப்பயிற்சி செய்யமாட்டார். அவர் இரண்டாவதாகவே வருவார். சஞ்சுவுக்கோ, நேரம் இருந்தால் வழக்கமாக பேட் செய்வார், ஏனெனில் அவர் மூன்றாவது தொடக்க வீரர். அவர் வெவ்வேறு இடங்களில் ஆடுவார், சில சமயம் குறிப்பிட்ட பயிற்சிகளைச் செய்வார். எனவே, இது தேர்வுக்கான அறிகுறி அல்ல. அவரை களமிறக்குவது பற்றி ஆலோசிக்கப்படும், ஆனால் வலைப்பயிற்சிகள் ஒரு அறிகுறி அல்ல," என்றார்.