சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி வாய்ப்பில் இந்தியா நீடிக்குமா என்பது, எதிர்வரும் ஜிம்பாப்வேவுடனான போட்டியில் முடிவு வைத்தே தெரியவரும். சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வேயை இன்று எதிர்கொள்கிறது. சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு கட்டாயம் வென்றாக வேண்டிய ஒரு போட்டியாகும்.
உலகத் தரவரிசையில் நம்பர் 1 டி20 ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராஸா ஜிம்பாப்வே அணிக்கு தலைமை தாங்குகிறார்.ஒருவேளை இந்தியா ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்? அதே வியாழக்கிழமை அன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் மற்றொரு சூப்பர் 8 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால், ஜிம்பாப்வேயிடம் இந்தியா தோற்கும் பட்சத்தில் 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி வாய்ப்பிலிருந்து இந்தியா வெளியேறும் நிலை ஏற்படும்.

தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. மேற்கு இந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், 2 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் முன்னேறும். தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் 2 புள்ளிகளுடன் நீடிக்கும். ஜிம்பாப்வே இந்தியாவுக்கு எதிராக அபார வெற்றி பெற்றால், அவர்களும் 2 போட்டிகளில் 2 புள்ளிகளைப் பெறுவார்கள், இதனால் இந்தியா 0 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு தள்ளப்படும்.
இத்தகைய சூழ்நிலையில், இந்தியா மார்ச் 1 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தினாலும், அதிகபட்சமாக 2 புள்ளிகளுடன் மட்டுமே முடிக்கும். இது அரையிறுதிக்கு தகுதி பெற போதுமானதாக இருக்காது. ஏனெனில், தென்னாப்பிரிக்கா தனது மூன்றாவது சூப்பர் 8 போட்டியில் டெல்லியில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. இதில் ஒரு அணி நிச்சயம் 2 புள்ளிகளுக்கு மேல் முடிக்கும், அந்த நிலையை இந்தியாவால் எட்ட முடியாது.
ஆனால், தென்னாப்பிரிக்கா அணியானது மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தினால், ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்தாலும் கூட, இந்தியா அரையிறுதி வாய்ப்பில் உயிர்ப்புடன் இருக்கும். அதன் படி, தென்னாப்பிரிக்கா மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தினால், மார்க்ரம் தலைமையிலான அந்த அணி 4 புள்ளிகளைப் பெறும். மேற்கு இந்தியத் தீவுகள் 2 போட்டிகளில் 2 புள்ளிகளுடன் நீடிக்கும். ஜிம்பாப்வே இந்தியாவுக்கு எதிராக வென்றால், அவர்களும் 2 போட்டிகளில் 2 புள்ளிகளைப் பெறுவார்கள்.
அதன்பிறகு, ஜிம்பாப்வே தனது மூன்றாவது மற்றும் கடைசி சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும். அப்போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வென்றால், அவர்கள் 6 புள்ளிகளுடன் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிப்பார்கள். ஜிம்பாப்வே அணி தனது சூப்பர் 8 சுற்றில் 2 புள்ளிகளுடன் முடிக்கும்.
இந்த சூழலில், இந்தியா தனது கடைசிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தினால், அவர்களும் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளைப் போல் 2 புள்ளிகளைப் பெறுவார்கள். அப்போது, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளில், சிறந்த நெட் ரன் ரேட் கொண்ட அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறும்.
தற்போது இந்தியாவின் நெட் ரன் ரேட் -3.800 ஆகவும், மேற்கிந்தியத் தீவுகளின் நெட் ரன் ரேட் +5.350 ஆகவும், ஜிம்பாப்வேயின் நெட் ரன் ரேட் -5.350 ஆகவும் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு தோல்விகளைச் சந்தித்தால் அதன் ரன் ரேட்டிலும் மாற்றம் ஏற்பட்டு, இந்தியாவுக்கு வாய்ப்புகள் உருவாகும். எனினும், ஜிம்பாப்வே தனது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, தென்னாப்பிரிக்கா மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தினாலும் இந்திய அணி வெளியேறும் நிலை ஏற்படும்.