அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததை தொடர்ந்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா ஆகியோர் நள்ளிரவில் உலகக்கோப்பையுடன் அனுமன் கோவிலுக்குச் சென்றது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் இந்திய வீரர் கீர்த்தி ஆசாத் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் உலகக் கோப்பையுடன் அகமதாபாத்தில் மைதானத்துக்கு அருகே உள்ள அனுமன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள முன்னாள் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான கீர்த்தி ஆசாத், வெற்றி பெற்ற கோப்பையை ஏன் மசூதி, தேவாலயம் அல்லது குருத்வாராவிற்கு எடுத்துச் செல்லவில்லை என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு: "இந்திய அணியின் செயல் வெட்கக்கேடானது! 1983ல் கபில் தேவ் தலைமையில் நாங்கள் உலகக் கோப்பையை வென்றபோது, எங்கள் அணியில் இந்து, முஸ்லிம், சீக்கியர் மற்றும் கிறிஸ்தவர் என அனைவரும் இருந்தனர். நாங்கள் வென்ற கோப்பையை எங்களின் புனித பூமியான தாய்நாடு இந்தியா, பாரதம், ஹிந்துஸ்தானிடம் தான் சமர்ப்பித்தோம்.
இந்திய கிரிக்கெட் கோப்பையை ஏன் இப்படி மதத்திற்குள் இழுக்க வேண்டும்? ஏன் ஒரு மசூதிக்கோ? தேவாலயத்திற்கோ? குருத்வாராவுக்கோ எடுத்துச் செல்லவில்லை? இந்த அணி ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது - சூர்யகுமார் யாதவ் அல்லது ஜெய் ஷாவின் குடும்பத்தை அல்ல!
சிராஜ் இந்தக் கோப்பையை மசூதியில் வைத்து அணிவகுப்பு நடத்தவில்லை. சஞ்சு இதனை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. சஞ்சு இந்த வெற்றியில் முக்கியப் பங்காற்றியதோடு, தொடர் நாயகன் விருதையும் வென்றவர். இந்தக் கோப்பை அனைத்து மதங்களையும் சேர்ந்த 140 கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது - இது ஒரு குறிப்பிட்ட மதத்தின் வெற்றிப் பயணம் அல்ல!" - இவ்வாறு கீர்த்தி ஆசாத் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி ஆசாத் கடந்த 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர் ஆவார். அந்த வெற்றியை நினைவுகூர்ந்த அவர், தாங்கள் கோப்பையை வென்றபோது அணியில் இந்து, முஸ்லிம், சீக்கியர் மற்றும் கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் இருந்ததாகக் கூறினார். தாங்கள் வென்ற கோப்பையை எந்தவொரு மத அடையாளமும் இன்றி ஒட்டுமொத்த தாய்நாட்டிற்குமே சமர்ப்பித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நடப்பு அணியில் உள்ள மாற்று மத வீரர்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கோப்பையை தேவாலயத்திற்கோ அல்லது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கோப்பையை மசூதிக்கோ எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.