லண்டன்: சமீபத்தில் முடிந்த 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பலம் வாய்ந்த இந்திய அணியை எளிதாக வெளியேற்றும் வாய்ப்பை தென்னாப்பிரிக்க அணி வீணடித்ததாகக் கூறி, இந்த உலகக்கோப்பை தொடரின் மிகவும் முட்டாள்தனமான அணி அதுதான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதிக்குச் செல்ல ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டிய கடுமையான நெருக்கடிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தள்ளப்பட்டது.

அந்த முக்கியமான சமயத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதி போவது சாத்தியமற்ற ஒன்றாக மாறும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதால், அடுத்து நடந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி வாழ்வா சாவா என்ற காலிறுதிப் போட்டியாக மாறியது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.
இது குறித்து பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வாகன், உலகக்கோப்பையிலேயே மிகவும் முட்டாள்தனமான அணி தென்னாப்பிரிக்காதான் என்று பகிரங்கமாகச் சாடியுள்ளார். ஒருவேளை சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தென்னாப்பிரிக்கா வெற்றிபெற அனுமதித்திருந்தால், அசுர பலத்துடன் வந்துகொண்டிருந்த இந்திய அணியின் பயணம் அப்போதே முடிவுக்கு வந்திருக்கும் என்று அவர் கூறினார். அந்த ஒரு வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பை தென்னாப்பிரிக்கா வழங்கிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசிய வாகன், உலகக்கோப்பையை நாம் வெல்ல வேண்டும் என்றால், முதலில் தொடரில் உள்ள மிகச்சிறந்த அணியை ஆரம்பத்திலேயே தந்திரமாக வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய உதவி செய்துவிட்டது. இறுதியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் பரிதாபமாகத் தோற்று தென்னாப்பிரிக்கா தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
