லாகூர்: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்காக, வீரர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. பிசிபியின் இந்த முடிவுக்கு, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அஹமத் ஷெசாத், தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சல்மான் அலி ஆஹா தலைமையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, டி20 உலகக் கோப்பை 2026 அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பிப்ரவரி 15 அன்று கொழும்பில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு தோல்வியைச் சந்தித்தது. பின்னர், சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் பரபரப்பான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தானின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு பிசிபி அபராதம் விதிக்கும் முடிவை அறிவித்தது. ஆனால், பிசிபியின் இந்த நடவடிக்கை தவறானது என ஷெசாத் சாடினார். இதுகுறித்து பேசிய அஹமத் ஷெசாத், "நீங்கள் பில்லியன் கணக்கான ரூபாய்களை வீரர்களுக்குச் செலவழிக்கும் நிலையில், அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பது என்பது மிகவும் முட்டாள்தனமான, குழந்தைத்தனமான ஒரு செயலாகும்,"
“உஸ்மான் தாரிக் போன்ற சில இளம் வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் 50 லட்சம் ரூபாயை ஈட்டவில்லை. அப்படியிருக்க, அவர்களால் எப்படி 50 லட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்த முடியும்? உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது, சாஹிப்சாதா ஃபர்ஹான் போன்றோரின் தவறு என்ன?” என்று அஹமத் ஷெசாத் உணர்ச்சிபூர்வமாக கேள்வி எழுப்பினார்.
“அவர்களுக்கு அபராதம் விதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை, நியாயமுமில்லை. குறிப்பிட்ட சில வீரர்களுக்கு இந்த அபராதம் மிகப்பெரிய அநீதியை இழைக்கும்,” என்றும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
“இவ்வளவு பயங்கரமான வெளிப்பாடுகளுக்குப் பின்னரும், இந்த நிர்வாகத்தில் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்று நான் உண்மையில் பார்க்க விரும்புகிறேன்.தலைமைத் தேர்வாளரும் அவரது அணியும் பதவி விலகுவார்களா? அலீம் தார், அசாத் ஷஃபிக், ஹசன் சீமா, வஹாப் ரியாஸ், மைக் ஹெசன் அல்லது சல்மான் அலி ஆஹா – என்று இவர்களில் யார் தங்கள் பதவியை விட்டு விலகப் போகிறார்கள்? ஆனால், எதுவுமே நடப்பதாகத் தெரியவில்லை.”
பிசிபி வீரர்களுக்கு மாதந்தோறும் 46 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் என்ற மிகப்பெரிய தொகையை சம்பளமாக வழங்குவதையும் ஷெசாத் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, "நமது நாட்டின் நிலைமை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும். அங்கு மக்கள் உணவுக்கே சிரமப்படும் சூழ்நிலையில், வீரர்கள் இத்தகைய மோசமான ஆட்டங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்க கூடாது."
"கிரிக்கெட் வீரர்களுக்கு நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கிறீர்கள். அவர்களின் ஆட்டத்திறனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நீங்கள் பிஎஸ்எல் போட்டிகளுக்கு ஒரு முறையற்ற ஏல முறையை கொண்டுள்ளீர்கள். டி20 போட்டிகளில் சிறப்பாகச் செயல்படாத சயீம் அயூப் போன்ற ஒரு வீரர் கூட, 13 கோடி ரூபாய் பெறுகிறார்."
"ஒப்பந்தத்தில் மாதந்தோறும் 46 லட்சம் கொடுப்பதும், பிஎஸ்எல்லில் கோடிக்கணக்கில் செலவழிப்பதும் தவறான நிதி மேலாண்மை. இதை உடனடியாக நிறுத்திவிட்டு, இந்த நிதியை உள்ளூர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முதலீடு செய்ய வேண்டும். வீரர்களுக்கு நீங்கள் வழங்கும் இந்த மிகப் பெரிய தொகையை கணிசமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் அதிகபட்ச மாதச் சம்பளத்தை 10 லட்சம் ரூபாயாகக் கொண்டு வர வேண்டும். அதேபோல, பிஎஸ்எல் ஏல முறையையும் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்."

"சேமிக்கப்படும் இந்தப் பணத்தை இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக 16, 15, 13 வயதுக்குட்பட்டோர் அணிகள், பள்ளிக் கிரிக்கெட், பல்கலைக்கழக கிரிக்கெட், கிளப், முதல் தர மற்றும் இரண்டாம் தரப் போட்டிகளில் தேசிய அளவில் முதலீடு செய்ய வேண்டும்." என்று தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்ற பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய வீரராக அங்கம் வகித்த அஹமத் ஷெசாத், கோரிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.