சென்னை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங், தனிப்பட்ட காரணத்திற்காக அணியை விட்டு விலகி, சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் அவரது பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரிங்கு சிங்கின் தந்தை காஞ்சந்த் சிங், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் ரிங்கு சிங் உடனடியாக வீடு திரும்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.

செவ்வாயன்று சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் "குடும்ப விசயம் காரணமாக ரிங்கு சிங் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்," என்று தெரிவித்தன.

ரிங்கு சிங் அணியை விட்டு வெளியேறி இருப்பதால், வியாழக்கிழமை ஜிம்பாப்வேவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் சூப்பர் 8 ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இப்போட்டி இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற கட்டமாகும். வியாழன் மாலையில் மேற்கு இந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்காவை வென்று, இந்தியா ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்தால், நடப்புச் சாம்பியனான இந்தியாவின் உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வரும்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் ரிங்கு சிங்கின் பேட்டிங் ஆட்டம் பெரிய அளவில் எடுபடவில்லை. பிப்ரவரி 7 அன்று அமெரிக்காவுக்கு எதிராக 14 பந்துகளில் 6 ரன்களும், பிப்ரவரி 12 அன்று நமீபியாவுக்கு எதிராக 6 பந்துகளில் 1 ரன்னும் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 4 பந்துகளில் அவுட் ஆகாமல் 11 ரன்களும், பிப்ரவரி 18 அன்று நெதர்லாந்துக்கு எதிராக 3 பந்துகளில் 6 ரன்களும் சேர்த்தார்.

சூப்பர் 8 சுற்றில் பிப்ரவரி 22 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2 பந்துகளில் டக் அவுட் ஆனார்.ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் ரிங்கு சிங் பங்கேற்காத பட்சத்தில், குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம். நேரடியாக ரிங்குவுக்கு இணையான வீரர் இல்லையென்றாலும், பந்துவீச்சுப் பிரிவுக்கு அவர் பலம் சேர்ப்பார்.