மும்பை: உலக கோப்பை அரையிறுதியில் இன்று மும்பை, வான்கடே மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை அரையிறுதியில் சந்திக்கிறது இந்தியா. இப்போட்டியை பார்க்க விராட் கோஹ்லி குடும்பத்தை சேர்ந்த யாரும் வரவில்லை. டிவியில் போட்டியை பார்த்தால்தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையால் டோணி சகோதரரும் மும்பை வரவில்லை.
இதுகுறித்து கோஹ்லி சகோதரர் விகாஸ் கூறுகையில், "நானோ எனது தாய் சரோஜ், சகோதரி பாவ்னாவோ, மைதானத்திற்கு செல்லப்போவதில்லை. கோஹ்லிக்கு நாட்டு மக்கள் ஆதரவு உள்ளது. அது போதும்" என்றார். அதேநேரம், கோஹ்லியின் குழந்தை பருவ கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா, இப்போட்டியை நேரில் பார்வையிட உள்ளாராம்.

அனைத்து போட்டிகளையுமே காண வருமாறு கோஹ்லி தனக்கு அழைப்புவிடுத்திருந்ததாகவும், மொகாலியில் நடந்த போட்டியை தன்னால் நேரில் சென்று காண முடியவில்லை என்றும் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இதனிடையே டோணியின் சகோதரர் நரேந்திரா கூறுகையில், முக்கியமான போட்டித்தொடரின்போது ஸ்டேடியம் செல்லாமல் டிவியிலேயே நாங்கள் கிரிக்கெட் பார்த்தால்தான் இந்தியா வெற்றி பெறுகிறது. எனவே இம்முறையும் அப்படியே செய்ய உள்ளோம். மேலும், டிவியில் போட்டியை பார்த்தால்தான் ரிப்ளேக்களை கவனிக்க முடியும் என்றார் அவர்.