ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இந்தியா - வங்கதேச போட்டியின் புது அப்டேட்.. இன்று வேட்டை இருக்கு!
அடிலெய்ட்: இந்திய அணியின் இன்றைய போட்டியை நினைத்து பதற்றத்திலேயே இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது 4வது லீக் போட்டியாக வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தனது முதல் 2 போட்டிகளில் அட்டகாசமான வெற்றியை பெற்ற இந்திய அணி 3வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது. எனவே அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இன்று வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியா vs வங்கதேசம்
குரூப் பி பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இரண்டுமே 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் மட்டும் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. எனவே இன்று வெற்றி பெறும் அணி தான் அரையிறுதியில் 2வது இடத்தை பிடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்படிபட்ட முக்கியமான போட்டியில் தான் ஒரு குழப்பம் ஏற்பட்டது.

ரசிகர்களின் கவலை
போட்டி நடைபெறும் அடிலெய்ட் நகரத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்தது. இதே போல போட்டி நடைபெறும் நாளன்றும் மழைக்கு அதிக வாய்ப்புள்ளதால், போட்டி ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு சிக்கலாகும் என்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் இருந்து வந்தனர்.

ரசிகர்களுக்கு நற்செய்தி
இந்நிலையில் அவர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. அதாவது அடிலெய்டில் திடீரென காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் நேற்று இரவு முதல் எந்தவித மழைப்பொழிவும் இல்லாமல் உள்ளது. இன்றும் மழைபொழிவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் போட்டி முழுவதும் மேக மூட்டத்துடன் தான் இருக்கும்.

பலத்த காற்று
மழைப்பொழிவு இருக்காது என்றாலும், காற்றின் வேகமும், குளிறும் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் ஸ்பின்னர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. இதே போல கம்பேக் கொடுக்க காத்துள்ள கே.எல்.ராகுல் போன்ற பேட்ஸ்மேனுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications