அடுத்த ஆட்டம்
குரூப் பி பிரிவில் உள்ள இந்திய அணி இனி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அடுத்ததாக உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும். அந்தவகையில் முதலில் வரும் நவம்பர் 2ம் தேதியன்று வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பின்னடைவு
இந்நிலையில் இந்தியாவின் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்க போட்டியின் போது டைவ் அடித்த அவருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆட்டத்தின் பாதியிலேயே அவர் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்டு, ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்தார்.
ஓய்வு தேவை
மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு நல்ல ஓய்வு தேவை என தெரிகிறது. இதனால் நாளை மறுநாள் நடைபெறும் வங்கதேச அணியுடனான போட்டியில் ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார். பண்ட் இடதுகை வீரர் என்பதால், இடது - வலது காம்பினேஷனும் பயன்படுத்தப்படலாம்.
கே.எல்.ராகுல் இடம்
ஒருவேளை தினேஷ் கார்த்திக் குணமடைந்து வந்தாலும், பண்ட் உள்ளே வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏனென்றால் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் சொதப்பி இருப்பதால், அவருக்கு மாற்று வீரராக பண்ட் ஓப்பனிங் கூட களமிறங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.