
வங்கதேச போட்டி
அதாவது குரூப் பி பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும் இருந்தது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருந்தனர். தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்துடன் தான் கடைசி ஆட்டத்தில் மோதியதால் எப்படியும் வென்றுவிடும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் வெளியேறிவிட்டது என நினைக்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தரும் வகையில் தோற்றது.

முக்கிய போட்டி
இதனால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற சூழல் ஏற்பட்டது. அதன்படி பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டாஸை போலவே வங்கதேச அணிக்கு முதல் 10 ஓவர்கள் சிறப்பாகவே அமைந்தது.

சொதப்பிய வங்கதேசம்
அந்த அணியின் ஓப்பனிங் வீரர் ஷாண்டோ 48 பந்துகளில் 54 ரன்களும், சௌம்யா சர்கார் 17 பந்துகளில் 20 ரன்களும் அடிக்க, வங்கதேச அணி 10.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 73 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 150+ ஸ்கோர் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ட்விஸ்ட் ஏற்பட்டது. மிடில் ஆர்டரில் வந்த அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து அதிரடி காட்ட முயன்று விக்கெட் ஆகினர். இதனால் 10 ஓவர்களில் 70 ஆக இருந்த ஸ்கோர் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 126 தான் என மாறியது.

பாகிஸ்தானின் வெற்றி
மிகவும் குறைந்த இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு நிதானமான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் முகமது ரிஸ்வான் 32 ரன்களும், பாபர் அசாம் 25 ரன்களும் அடிக்க அந்த அணி 11.2 ஓவர்களில் 61 /2 என வலுவாக இருந்தது. இதன்பின்னர் வந்த முகமது ஹாரிஸ் 18 பந்துகளில் 31 ரன்களும், ஷான் மசூத் 24 ரன்களும் அடிக்க 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 128 ரன்களை எடுத்து வெற்றி கண்டது. மேலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications