அடிலெய்ட்: அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து டிராவிட் பேசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகள் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அடிலெய்டில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்தில் இருந்தே அஸ்வினுக்கு பதிலாக யுவேந்திர சாஹல் சேர்க்கப்பட வேண்டும் என வல்லுநர்கள் கோரி வருகின்றனர். ஆனால் தொடக்கத்தில் இருந்தே சாஹல் வெளியில் தான் அமரவைக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கிலும் அஸ்வின் உதவி வருவதால் அவர் வாய்ப்பு பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் நடப்பு தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த பவுலராக அஸ்வின் திகழ்கிறார்.

எனினும் அஸ்வினுக்கு எதிரான குரல் குறையவே இல்லை. அஸ்வின் ரன்களை கட்டுப்படுத்துகிறாரே தவிர விக்கெட் எடுப்பதில்லை. இதுவே சாஹல் என்றால் ரன்கள் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பார் என கூறப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அதில், நாங்கள் மீண்டும் பிட்ச்-ஐ சென்று பார்த்தால் தான் முடிவெடுக்க முடியும் எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அங்கு கடைசியாக நடந்த பாக் - வங்கதேச போட்டியை பார்த்தேன். அதில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நாங்கள் அடிலெய்டில் ஆடியபோது சுத்தமாக டேர்ன் இல்லை. தற்போது டேர்ன் ஆகிறது. எனவே போட்டிக்கு முன்பு எப்படி களம் இருக்கிறதோ அதற்கேற்ற வகையில் தான் சாஹலா? அஸ்வினா ? என்பதை முடிவெடுக்க முடியும்.