மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் கடைசி நேரத்தில் இந்திய வீரர்கள் செய்திருக்கும் ஒரு விஷயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு மெல்பேர்ன் மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தனது 2 பயிற்சி போட்டிகளில் ஒன்றை மட்டுமே விளையாடி அதில் வெற்றியும் கண்டுள்ளது. இதனையடுத்து மெல்பேர்னுக்கு வந்த அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் கடந்தாண்டு பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் செய்த விஷயம் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது அணியின் கடைசி நாள் பயிற்சியான இன்று விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், யுவேந்திர சாஹல், கே.எல்.ராகுல் ஆகியோர் வலைப்பயிற்சிக்கு செல்லவில்லை. மாறாக ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி உள்ளிட்ட பலரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
நாளைய தினம் முக்கிய போட்டியை வைத்துக்கொண்டு இந்தியாவின் முக்கிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாதது ஏன் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஏற்கனவே ஒரு பயிற்சி ஆட்டம் ரத்தாகியுள்ள சூழலில் கடைசிகட்ட வாய்ப்புகளை ஏன் ரோகித் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொருபுறம் வீரர்களின் மனநிலையை சீராக வைக்க தான் ஓய்வு தரப்பட்டதாக கூறப்படுகிறது.