
இந்திய அணி
இந்திய அணி 2007ம் ஆண்டு கடைசியாக டி20 உலகக்கோப்பையை வென்றது. அதன்பின்னர் 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது கனவாகவே இருந்து வருகிறது. எனவே இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான அணியாவது வென்று காட்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கேற்றார் போல இந்திய அணியும் பயிற்சி போட்டியில் கலக்கி வருகிறது.

புது சர்ச்சை
இந்நிலையில் இந்திய அணிக்குள்ளேயே புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்திய அணியில் இருந்து விராட் கோலி இன்னமும் ஒதுக்கப்பட்டே வருவதாகவும், தற்போது ஐசிசி-யும் அதே வேலையை செய்து வருவதாகவும் விராட் கோலியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக புதிய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிரான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

என்ன காரணம்
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கான விளம்பர வீடியோவை ஐசிசி வெளியிட்டது. அதில் இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், யுவேந்திர சாஹல் ஆகிய 4 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். இதில் முன்னணி வீரரான விராட் கோலி மட்டும் இடம் பெறவில்லை. இதுதான் ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது.

இந்தியாவின் நம்பிக்கை
இந்திய அணிக்கு தற்போது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது விராட் கோலி தான். மற்ற வீரர்கள் அதிரடி காட்டி சொதப்பும் போதும், கோலி தூண் போல நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் கொடுக்கிறார். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் ஒருபுறம் அதிரடி காட்ட, கோலி அவருக்கு உறுதுணையாக இருப்பது பல அணிகளுக்கும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications