மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி பரிசுப் பணம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் 1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற அணியை சேர்ந்த, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முன்னாள் வீரர், "எங்களுக்கும் பரிசுப் பணம் கொடுக்க வேண்டும்" என போர்க்கொடி தூக்கி இருக்கிறார். அதனால், இந்திய கிரிக்கெட் உலகில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் பிரபலமாகாத 1983 ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை வென்றது. இன்று உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இருக்கும் பிசிசிஐ, அன்று பணம் இல்லாமல் தவித்து வந்தது. அப்போது உலகக் கோப்பை வென்ற வீரர்களுக்கு பரிசு பணம் கொடுக்க திண்டாடியதாக கூறப்படுகிறது. ஆனால், 2024 உலகக் கோப்பை வென்ற அணிக்கு 125 கோடி அளித்து பணத்தை வாரி இறைத்துள்ளது பிசிசிஐ.

2024 டி20 உலகக் கோப்பை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமாக 125 கோடி பரிசு பணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரப்பூர்வமான அணியில் இடம் பெற்ற 15 வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாயும், ரிசர்வ் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்று இருந்தவர்களுக்கு தலா 2.5 கோடி ரூபாயும், தேர்வு குழுவினருக்கு தலா ஒரு கோடி ரூபாயும், இந்திய அணியின் உதவியாளர்களான த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட், பிசியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு தலா 2 கோடி ரூபாயும் அளிக்கப்பட உள்ளது.
இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையிலான அணிக்கு ஒட்டுமொத்தமாக 12 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. பின்னர் 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த வீரர்களுக்கு தலா 2 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.
இவற்றை சுட்டிக்காட்டி இருக்கும் அந்த முன்னாள் வீரர், "1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற அணிக்கு அப்போது பிசிசிஐ பரிசுப் பணம் வழங்கவில்லை. அப்போது எங்களிடம் பணம் இல்லை என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் இப்போது எங்களுக்கு பரிசு அளிக்கலாமே, எது அவர்களை தடுக்கிறது? 1983 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த வீரர்களில் சிலருக்கு மட்டுமே தற்போது வேலை உள்ளது. மற்றவர்கள் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம். அதை பிசிசிஐ கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.
இவரது இந்த கோரிக்கை இந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் கிடைத்த தகவலின் அடிப்படையில், 1983 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை வென்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பிசிசிஐ முதற்கட்டமாக 25000 ரூபாய் அளித்துள்ளது. அதன் பின் பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர் தலைமையில் நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் கிடைத்த பணத்தை வைத்து இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த முன்னாள் வீரர் தங்களுக்கு பிசிசிஐ பரிசளிக்கவில்லை என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.