நியூயார்க் : 2024 டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நியூயார்க் நகர மைதானத்தில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது அங்குள்ள பிட்ச்களை கண்காணிக்க மட்டுமே தனியாக ஒரு காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூயார்க் நாசா கவுண்டி மைதானம் கடந்த மாதம் தான் திறக்கப்பட்டது. வெறும் ஆறு மாதத்தில் அந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகக் குறுகிய காலத்தில் உலகக் கோப்பைக்காக இந்த மைதானம் தயாரானதால் பிட்ச்கள் அனைத்துமே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன. எனவே, இவை ரெடிமேட் பிட்ச்கள் தான். இந்த பிட்ச்களில் தான் இந்தியா விளையாட உள்ள மூன்று குரூப் போட்டிகள் நடைபெற உள்ளன.

குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் இங்குதான் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. ஒருவேளை அவர்கள் போட்டியை நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் பிட்ச்களை சேதப்படுத்தினாலே போதுமானது. அந்த மைதானத்திலேயே உருவாக்கப்பட்ட பிட்ச் என்றால் சேதப்படுத்தினால் கூட கூடுதலாக ஏழு - எட்டு பிட்ச்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பிட்ச்சை நாம் எளிதாக பயன்படுத்த முடியும்.
ஆனால், இங்கு சொந்தமாக பிட்ச் இல்லை. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இருப்பதால் அதை லேசாக சேதப்படுத்தினாலே போட்டி நடத்த முடியாத அளவுக்கு நிலைமை சென்று விடும். மற்றொரு பிட்ச்சை வரவழைத்து அங்கு அமைக்க சில நாட்கள் ஆவது ஆகும். அதனால் மிகப் பெரிய பாதிப்பு உண்டாக்கும்.
இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், நியூயார்க் நகர காவல் துறைக்கு தெரியப்படுத்தி உள்ளது. இதை அடுத்து பிட்ச்சை பாதுகாக்க மட்டும் தனி குழு ஒன்றை நியூயார்க் நகர அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர். நியூயார்க் நகரின் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சிலரை அந்தப் பணியில் இருந்து விடுவித்து,24 மணி நேரமும் பிட்ச்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் போது இந்தியாவில் பிட்ச்களை தங்களுக்கு ஏற்றவாறு இந்திய அணி மாற்றி அமைத்தது என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அமெரிக்காவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் பிட்ச்சைகளை தொட்டால் கைது செய்ய 24 மணி நேரமும் காவல்துறையினர் இருக்கின்றனர்.