மும்பை : யுவராஜ் சிங்கின் சீடனாக அறியப்படும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மாவை உடனடியாக இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகின்றன.
உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அபிஷேக் சர்மா அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். அத்துடன் அவர் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர் ஆகவும் செயல்படுவார். இதை அப்படியே கிட்டத்தட்ட யுவராஜ் சிங்கின் செயல்பாடுகளுடன் ஒப்பிட முடியும். யுவராஜ் சிங்கும் அதிரடி பேட்ஸ்மேன் ஆக இருந்ததோடு பகுதிநேர சுழற் பந்துச்சாளராக இருந்தார்.

இப்படி யுவராஜ் சிங்கோடு, அபிஷேக் சர்மாவுக்கு நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங்கின் சீடர் என்பது தான். பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருக்கும் அபிஷேக் சர்மாவுக்கு, அதே அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
2020 கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் பஞ்சாப் அணியை சேர்ந்த சில இளம் வீரர்களை தன் வீட்டிலேயே தங்க வைத்து யுவராஜ் சிங் பயிற்சி அளித்தார். அதில் இடம்பெற்ற ஒரு முக்கியமான வீரர் சுப்மன் கில். அவர் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.
அதே கொரோனா காலகட்டத்தில் பயிற்சி பெற்ற மற்றொரு வீரர் அபிஷேக் சர்மா ஆவார். அபிஷேக் சர்மா இது வரை ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், இரண்டாவது தகுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சுழற் பந்துவீச்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியில் அவர் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
பகுதி நேர பந்துவீச்சாளராக இருந்தும் முழுமையாக நான்கு ஓவர்களை வீசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதை அடுத்து அபிஷேக் ஷர்மாவை உடனடியாக இந்திய டி20 அணியில் சேர்த்து 2024 டி20 உலகக் கோப்பையில் ஆட வைக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். யுவராஜ் சிங் எப்படி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்காற்றினாரோ அதே போல அவரரது சீடர் அபிஷேக் சர்மாவும் இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுப்பார் எனவும் சிலர் கூறி உள்ளனர்.