கிங்ஸ்டவுன்: தங்களது பரம எதிரி அணியான ஆஸ்திரேலியாவை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து தூக்கி எறிந்துள்ளன. ஆஸ்திரேலியா அணி என்றாலே கடந்த 21 ஆண்டுகளாக இந்திய அணிக்கு வேப்பங்காயாக கசக்கும். அந்த அளவுக்கு கசப்பான அனுபவங்களை அந்த அணி இந்திய அணிக்கு கொடுத்துள்ளது.
2003 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அந்த முதல் கசப்பான அனுபவம் நடந்தது. அப்போது நீண்ட காலத்துக்கு பின் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனால், அப்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது. அதனால், இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை கண்டாலே எதிரி மனப்பான்மையோடு பார்க்க தொடங்கினர்.

அதன்பின் இந்திய அணி இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் ஆஸ்திரேலியாவை பலமுறை வீழ்த்தியது. எனினும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த தோல்விக்கு எதுவும் ஈடு இணை ஆகவில்லை. பின் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இந்திய அணிக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த முறையும் ஆஸ்திரேலியா, இந்திய அணியை வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதனால், கடந்த ஓராண்டாக இந்திய அணி ஒருவித அழுத்தத்திலேயே இருந்தது. இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை உலகக் கோப்பை தொடரிலிருந்து சூப்பர் 8 சுற்றோடு வெளியேற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது.
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியிடம், ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது. எதிர்பார்த்தது போலவே இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஏற்கனவே, ஆஸ்திரேலிய அணியை சூப்பர் 8 சுற்றில் வீழ்த்தி மனம் குளிர்ந்து போயிருந்த ஆப்கானிஸ்தான் அணி, அடுத்து வங்கதேச அணியை வீழ்த்தினால் ஆஸ்திரேலியாவை ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றலாம் என்ற நிலை இருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் ஆஸ்திரேலியாவுடன் கசப்பான அனுபவம் உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி அந்த நாட்டில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலிய அணி கடந்த பத்து ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் அவர்களை ஒதுக்கி வைத்திருந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது இந்த மனக்குமுறலை வெளியிட்டு வந்தனர்.
ஆனால், உலகக்கோப்பை தொடரில் மட்டும் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிக்கு முன்னேற விடாமல் வெளியேற்றியது. நட்பு நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் தங்களின் பரம எதிரியை ஒன்று சேர்ந்து வீழ்த்தி பழி தீர்த்துள்ளன.