பார்படோஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ரிஷப் பண்ட் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் ஐந்தாவது ஓவர் வரை 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த நிலையில் ஆறாவது ஓவரை முகமது நபி வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். அதற்கு அடுத்த பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்றார் ரிஷப் பண்ட். பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் பந்தை தூக்கி அடித்தார்.

பந்து பவுண்டரி எல்லைக்கு அருகே நின்று இருந்த நவீன் உல் ஹக் வசம் சென்றது. அவர் பந்தை நோக்கி சிறிது நகர்ந்து சென்றார். பந்தை கைகளில் பிடிக்க முயன்று, பின்னர் தவறவிட்டார். இதை அடுத்து பந்து பவுண்டரிக்கு சென்றது. ரிஷப் பண்ட் அதிரடி வீரர் என்ற நிலையில் முக்கிய விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை நவீன் உல் ஹக் தவறவிட்டார்.
இதை அடுத்து ஆப்கானிஸ்தானின் மூத்த வீரரான முகமது நபி உறைந்து போனார். அவர் நவீன் உல் ஹக்கை பார்த்து சில வினாடிகள் அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தார். அதற்கு அடுத்த பந்திலும் ரிஷப் பண்ட் ஃபோர் அடித்தார். மூன்று பந்துகளில் மூன்று ஃபோர் அடித்ததை அடுத்து இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக எகிறியது.
எனினும், அதற்கு அடுத்த ஓவரில் ரஷித் கான், பண்ட் விக்கெட்டை வீழ்த்தினார். ரிஷப் பண்ட் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.