டரூபா: 2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டி டரூபா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான். அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.
முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கிய அந்த அணி, 28 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. தென்னாப்பிரிக்கா வீரர்களின் வேகமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர் ஆப்கானிஸ்தான் வீரர்கள். பிட்ச்சில் லேசான பவுன்ஸ் இருந்ததால் அதை சரியாக கணித்து ஆட முடியவில்லை.

10 ஓவர்களில் எல்லாம் ஆப்கானிஸ்தான் அணி 50 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. அடுத்து 12வது ஓவருக்குள் அனைத்து விக்கெட்களும் வீழ்ந்தன. 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆப்கானிஸ்தான். அதில் நான்கு வீரர்கள் வேகப் பந்துவீச்சில் பவுல்ட் அவுட் ஆகி இருந்தார்கள். மூன்று வீரர்கள் சுழற் பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி இருந்தார்கள்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் வீரர்களால் பந்தை சரியாக கணித்து அடிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. பந்தின் வேகம் மற்றும் பவுன்சை அவர்களால் கணிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 10 ரன்கள் எடுத்திருந்தார். மிகவும் போராடி முதன்முறையாக டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் படுமோசமாக பேட்டிங் செய்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க்கோ ஜான்சன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் ஷாம்சி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். காகிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.