டரூபா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் இழந்தது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், "காது கேட்காத" விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ்-ஆல் அந்த வாய்ப்பும் போனது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. மிக மோசமாக பேட்டிங் ஆடிய நிலையில் அடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே போட்டியில் வெற்றி பெறலாம் என்ற அவசரத்தில் இருந்தார் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான்.

இரண்டாவது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து அந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் லீசா ஹென்ரிக்ஸ் பேட்டிங் செய்து வந்தனர். அப்போது மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தை மார்க்ரம் அடிக்கும் போது பந்து அவரது பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. அந்த பந்து விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா கைகளுக்கு சென்றது.
ஆனால், பந்து பேட்டில் பட்டது கண்களால் பார்க்கும் போது தெரியவில்லை. அப்போது கேப்டன் ரஷித் கான் பந்து பேட்டில் பட்டது போன்ற சத்தம் கேட்டதாக கூறினார். விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லாவிடம், "பந்து பேட்டில் பட்டதா?" எனக் கேட்டார். ஆனால், அவர் தனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை என கூறிவிட்டார்.

அதனால், அப்போது ரஷித் கான் ரிவ்யூ கேட்கவில்லை. பின்னர் அந்த பந்தின் ரீப்ளே காட்டப்பட்ட போது பந்து பேட்டில் பட்டது தெரிந்தது. இதை அடுத்து கேப்டன் ரஷித் கான் ஏமாற்றம் அடைந்தார். விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லாவை பார்த்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். "காதில் கேட்கவில்லை" எனக் கூறிய விக்கெட் கீப்பரால் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் இழந்தது. அதன் பின் அந்த அணிக்கு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.