டரூபா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் முதல் இடம் பெற்று இருந்த தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும் என்ற நிலை இருந்தது. அதனால் ஆப்கானிஸ்தான் அணி மழை வரக்கூடாது என வேண்டிக் கொண்டிருந்தது.
தற்போது முதல் அரை இறுதி போட்டி நடைபெற உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நேரத்தில் மழை பெய்யாது என வானிலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அடுத்து போட்டி முழுமையாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

இந்த போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்க முடியாது. இந்த போட்டி நடைபெற உள்ள அதே பிட்ச்சில் இதற்கு முன் நடந்த முக்கிய போட்டியான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 149 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தின் வீழ்த்தியது.
எனவே, இந்த மைதானத்தில் 150 ரன்கள் கூட நல்ல ஸ்கோர்தான். இதற்கு முன் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளை ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வீழ்த்தி இருந்தது. அதற்கு காரணம், அங்கு ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பலமாக இருந்ததுதான். இரண்டாவதாக ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசும் போது அந்த அணியின் பவுலிங் திட்டத்தை எந்த அணியாலும் உடைக்க முடியவில்லை.
அந்த வகையில் இந்தப் போட்டியில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால், அந்த அணி குறைவான ஸ்கோர் எடுத்தாலும் கூட இரண்டாவதாக பந்து வீசும் போது தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இந்த தொடரில் இதுவரை தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடையவில்லை என்ற போதும் பல போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி இருந்தது. அதிக விக்கெட்களை இழந்து இருந்தது. மேலும், அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி இதுவரை எந்த போட்டியிலும் அதிரடியாக ரன் குவிக்கவும் இல்லை. அதை வைத்துப் பார்க்கும் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த அரை இறுதியில் சரிசமமான வாய்ப்பு உள்ளது.