மும்பை: 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. இனி இளம் வீரர்கள் கையில் தான் இந்திய டி20 அணி என்ற முடிவில் இருந்தது பிசிசிஐ. அதன் பின் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பின் 2024 டி20 உலகக் கோப்பை குறித்த பேச்சு பிசிசிஐ-யில் இருந்தது. அப்போது ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கி இருந்தார். இந்த நிலையில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக் கோப்பை செயல்பட வேண்டும் என விரும்பினார். அது குறித்து அவர் அப்போது ரோஹித் சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது ரோஹித் சர்மா, 2024 டி20 உலகக் கோப்பை தான் தனது கடைசி டி20 தொடர் என்றும், அதன் பின்பு தான் டி20 யில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் அமெரிக்காவில் டி20 கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் உலகக் கோப்பை அங்கு நடத்தப்பட்டதால் இந்த தொடரில் உலகின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி இடம் பெற வேண்டும் என பிசிசிஐ நினைத்தது.
அது குறித்து அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா விவாதித்துள்ளனர். இந்த நிலையில், ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஒரே ஒரு போட்டியில் கோலி ஆடி, அதிலும் டக் அவுட் ஆகி இருந்தார். அதனால், அவரை தேர்வு செய்யலாமா? வேண்டாமா? என்ற சிக்கலில் இருந்தனர். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அவர் அதிக ரன்களை குவித்ததால் அவரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளனர்.
அஜித் அகர்கர் எடுத்த அந்த முடிவு இன்று வெற்றிகரமான முடிவாக மாறி உள்ளது. அதன் காரணமாக ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பை வென்று இருக்கிறது. ரோஹித் சர்மா தான் கூறியது போலவே இந்த உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.