மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்படாததற்கு காரணம் குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி 2 நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியின் ஃபினிஷராக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் கேஎல் ராகுல் சேர்க்கப்படாததும் ரசிகர்களிடையே விவாதமாக மாறியது. அதுமட்டுமல்லாமல் 4 ஸ்பின்னர்களை அழைத்து கொண்டு இந்திய அணியினர் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
அதில் அஜித் அகர்கர் பேசுகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் 15 வீரர்கள் குறித்த விவாதம் ஐபிஎல் தொடருக்கு முன்பாக தொடங்கிவிட்டது. 2 மாதம் நடக்கும் ஐபிஎல் தொடரை மட்டுமே வைத்து இந்திய அணி தேர்வு செய்யப்படவில்லை. 70 முதல் 80 சதவிகிதம் வரை ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதில் ரிங்கு சிங் சேர்க்கப்படாதது அவரின் தவறு அல்ல. அதுவொரு கடினமான முடிவாக அமைந்தது.
சுப்மன் கில், ரிங்கு சிங் இருவரும் எந்த தவறும் செய்யவில்லை. இந்திய அணியின் காம்பினேஷனை பொறுத்து வீரர்களின் தேர்வு அமைந்தது. லெக் ஸ்பின்னர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சில வாய்ப்புகள் தேவையாக இருந்தது. அதனால் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவருமே தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் மிடில் ஆர்டரில் ஒரு ஹிட்டர் தேவையாக இருந்தார். டாப் ஆர்டரில் மோசம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஹிட்டர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அதனால் மிடில் ஆர்டரில் யார் பவுலிங் செய்தாலும் கவலைப்படாமல் சிக்சர் அடிக்கக் கூடிய ஒரு வீரர் தேவைப்பட்டார். ஐபிஎல் தொடரில் சிவம் துபே அந்த வேலையை சிறப்பாக செய்து கொண்டுள்ளார். இருந்தாலும் பிளேயிங் லெவனில் சிவம் துபே இருப்பாரா என்று எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. இவையனைத்தும் சூழல், காம்பினேஷன் ஆகியவற்றை பொறுத்தும், எதிரணியை பொறுத்தும் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.