மும்பை : டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் மிகப்பெரிய குறை ஒன்று இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்திருக்கிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் இரண்டாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்துடன் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் விராட் கோலி களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா இந்திய அணி இடது கை வலது கை காம்பினேஷன் இருக்கும் படி பேட்டிங் வரிசையை மாற்ற முடிவெடுத்து இருக்கிறது. அது நிச்சயம் நல்ல விஷயம் தான். எனினும் தொடக்கத்திலேயே இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அது ரோகித் சர்மாவும் விராட் கோலியும் தான்.
மூன்றாவது வீரராக ரிஷப் பண்ட், நான்காவது வீரராக சூரியகுமார் யாதவும் விளையாட வாய்ப்பு இருக்கிறது. எனினும் ஐந்தாவது வீரராக யார் களமிறங்க போகிறார்கள் என்பது ஆட்டத்தின் தன்மை குறித்து முடிவெடுக்கப்படும்
அது சிவம் துபேவாகவும், ஹர்திக் பாண்டியாகவும் இருக்கலாம். மேலும் ஜடேஜா, அக்சர் பட்டேல் என பலர் இருக்கிறார்கள்.
இந்த சூழலில் நீங்கள் ஒன்று கவனித்தால், அணியின் பல இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இத்தனை பேர் வைத்து என்ன செய்யப் போகிறார்கள். தற்போது நாம் எந்த வீரர்களை தொடக்கத்தில் பயன்படுத்த போகிறோம் என்ற முடிவை எடுத்திருக்க வேண்டாமா? இன்னும் ஒரு பெரிய மைனஸ் இருக்கிறது.
2022 டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதில் இந்தியா அரை இறுதி வரை விளையாடி தோல்வியை தழுவியது. அந்த தொடருக்குப் பிறகு நாம் டி20 கிரிக்கெட்டில் ஒரே மாதிரியான பிளேயிங் லெவன் மற்றும் பேட்டிங் வரிசையில் தான் வைத்து இருந்தோம். பல சீனியர் வீரர்கள் அணியில் இடம் பெறாமல் இருந்தார்கள்.
தற்போது திடீரென்று விராட் கோலி டி20 அணியில் இடம் பிடித்திருக்கிறார். சர்வதேச அளவில் அவர் டி20-ல் பல போட்டிகளில் விளையாட வில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்கு என்ன ரோல் வழங்கப்படும். மற்ற வீரர்களுக்கு என்ன ரோல் வழங்கப்படும். இல்லை என்ன யுக்திகள் மாற்றப்பட்டு இருக்கிறது என்பது குறித்து எல்லாம் விவரிக்கப்பட்டிருக்கிறதா என்றும் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.