பார்படோஸ் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கியமான கட்டமான சூப்பர் 8 சுற்று இன்னும் இரண்டு தினங்களில் துவங்க உள்ளது. இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் நடக்க உள்ள பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் 20 அன்று நடக்க உள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகள் அனைத்துக்கும் மழையால் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை முன்னறிவிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற உள்ளன. அதில் பார்போடோஸ் மைதானத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டியின் போது 10 முதல் 15 சதவீதம் மழை வர வாய்ப்பு உள்ளது. அந்த மைதானத்தில் நடைபெறும் மற்ற போட்டிகளின் போது 40 முதல் 55 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்து செயின்ட் லூசியா மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் குறிப்பாக இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால் இந்த இரண்டு பெரிய அணிகளும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும்.
அடுத்து செயின்ட் வின்சென்ட் மைதானத்தில் 52 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இந்தியா - வங்கதேச போட்டி நடைபெற உள்ள அடுத்து ஆன்டிகுவா மைதானத்தில் 20 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது. இந்தியா ஆடும் போட்டிகள் தவிர்த்து மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் போதும் மழை பெய்ய உள்ளது. கிட்டத்தட்ட சூப்பர் 8 சுற்றின் 80 சதவீத போட்டிகள் மழையால் சிறிய அளவிலாவது பாதிப்புக்கு உள்ளாகும்.
இதை அடுத்து இந்த தொடரை நடத்திவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடும் அழுத்தத்தில் உள்ளது. ஏற்கனவே குரூப் சுற்றில் சில போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இங்கிலாந்து - நமீபியா போட்டி மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டு பின்னர் ஓவர்கள் குறிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மற்ற போட்டிகளில் எல்லாம் போட்டிக்கு முன் மழை பெய்து, போட்டி நேரத்தில் மழையே பெய்யாத போதும் ஆடுகளத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் போட்டிகள் கைவிடப்பட்டன.
அந்த அளவுக்கு மோசமான அளவில் மைதானங்கள் பராமரிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் உள்ளன. இதை பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். குறிப்பாக மழை பெய்யும் போது பிட்ச்சை மட்டுமே உறை போட்டு மூடி வருகிறார்கள். அதை சுற்றி இருக்கும் அவுட் ஃபீல்டு பகுதிகளில் மழை நீர் தேங்கி விடுகிறது. அதையும் உறை போட்டு மூடினால் மழை நீர் தேங்குவதை தவிர்க்கலாம். ஆனால், அதிக உறைகளை வாங்க பணம் இல்லாத நிலையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள ஆடுகளங்கள் இருக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மழை பாதிப்பு குறித்து முன்பே கணித்து அந்த மைதானங்களுக்கு அதிக உறைகளை வாங்க உதவி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. இதை சுட்டிக்காட்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சூப்பர் 8 சுற்றில் மழையால் போட்டிகள் கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் முக்கிய அணிகளான இந்தியா., ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும். அதனால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை முக்கிய அணிகள் இழக்க நேரிடும். எனவே. இப்போதே சர்வதே கிரிக்கெட் கவுன்சில் அதிக உறைகளை வாங்கி மைதானத்தை மூடி வைத்து மழை பாதிப்பில் இருந்து மைதானங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.