மும்பை: 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த அந்த ஒரு நொடி... ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சிக்ஸருக்குத் தூக்க, எல்லைக்கோட்டின் அருகே காற்றில் பறந்து பந்தைப் பிடித்த சூர்யகுமார் யாதவின் அந்த அசாத்திய கேட்ச், இந்தியாவிற்கு உலகக்கோப்பையை வென்று தந்தது.
அந்த கேட்ச் ஒரு தனிநபர் திறமையின் உச்சம் என்று கொண்டாடப்பட்ட நிலையில், அதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான, யாருமே அறிந்திராத கடவுளின் திட்டம் இருந்ததாக முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டு கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய அந்த பரபரப்பான இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில், தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டேவிட் மில்லர் களத்தில் இருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்தையே லாங்-ஆஃப் திசையில் சிக்ஸருக்கு விளாசினார் மில்லர்.
பந்து எல்லைக்கோட்டைத் தாண்டும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மின்னல் வேகத்தில் ஓடிவந்து, காற்றில் பறந்து பந்தைப் பிடித்தார் சூர்யகுமார் யாதவ். உடலை பேலன்ஸ் செய்து, எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்வதற்குள் பந்தை மீண்டும் மைதானத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு, உள்ளே வந்து அந்த கேட்ச்சை அவர் நிறைவு செய்த விதம், கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாகப் பதிவானது.
ஆனால், இந்த நம்பமுடியாத கேட்ச்சின் பின்னணியில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்திருப்பதை, அந்தப் போட்டியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய அம்பத்தி ராயுடு தற்போது வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அம்பத்தி ராயுடு, "போட்டியின் இடைவேளையின் போது, ஒளிபரப்புக் குழுவினர் வர்ணனையாளர்களின் வசதிக்காக ஒரு நாற்காலி மற்றும் திரையை எல்லைக்கோட்டின் அருகே வைத்திருந்தனர். அதற்காக, பவுண்டரி கயிறை சற்று உள்நோக்கித் தள்ளி வைத்திருக்கிறார்கள். ஆனால், இடைவேளை முடிந்ததும், அந்த உபகரணங்களை அகற்றியவர்கள், கயிறை அதன் பழைய இடத்திற்கு நகர்த்த மறந்துவிட்டனர்," என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பவுண்டரி எல்லை எங்களுக்குச் சற்றே பெரிதாகியது. இதை நாங்கள் வர்ணனையாளர் அறையில் இருந்து தெளிவாகப் பார்க்க முடிந்தது. அது ஒரு தெய்வீகத் தலையீடு, கடவுளின் திட்டம் (God's plan) என்றுதான் சொல்ல வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, அந்த பவுண்டரி கயிறு அதன் இயல்பான இடத்தில் இருந்திருந்தால், மில்லர் அடித்த பந்து சிக்ஸராகியிருக்க வாய்ப்பிருந்திருக்குமா என்ற கேள்விக்கு, "அது சிக்ஸரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை கயிறு அதன் இயல்பான இடத்தில் இருந்திருந்தால், சூர்யகுமார் இன்னும் கொஞ்சம் உள்ளிருந்து ஓடி வந்திருக்கலாம்," என்று அம்பத்தி ராயுடு பதிலளித்தார்.
எது எப்படி இருந்தாலும், அந்த கேட்ச் விதிமுறைப்படி முற்றிலும் சரியானது என்றும், அது ஒரு "க்ளீன் கேட்ச்" என்றும் ராயுடு உறுதிப்படுத்தினார். "முடிவில், கடவுள் நம்முடன் இருந்தார்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஒளிபரப்புக் குழுவினரின் ஒரு சிறிய கவனக்குறைவு, பவுண்டரி எல்லையின் தூரத்தை சில அங்குலங்கள் அதிகரித்ததும், சரியாக அதே இடத்தில், அதே நேரத்தில், இந்தியாவின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவ் நின்று, அந்த மாயாஜால கேட்சைப் பிடித்ததும் வெறும் தற்செயல் நிகழ்வா அல்லது ராயுடு சொல்வது போல அது ஒரு "தெய்வீகத் திட்டமா" என்பது சுவாரஸ்யமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.