நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரை அசத்தலாக வீசி கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க வீரர் சவுரப் நெட்ரவால்கர், 2010 யு19 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிவடைந்த நிலையில், வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 6 பந்துகளில் 18 ரன்களை விளாசியது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6 பந்துகளில் 13 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அமெரிக்கா அணிக்காக சவுரப் நெட்ரவால்கர் மிகச்சிறப்பாக சூப்பர் ஓவரை வீசினார். இதனால் நெட்ரவால்கரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சவுரப் நெட்ரவால்கர் குறித்த சில ஆச்சரியமளிக்கும் விஷயங்கள் தெரிய வந்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் நெட்ரவால்கர், வார இறுதியில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுமார் 6 மணி நேரம் பயணித்து லாஸ் ஏஞ்சலஸ் வந்து செல்வார்.
அதன்பின் வார நாட்களில் வழக்கம் போல் தனது பொறியியல் பணியில் ஈடுபடுவார். இந்தியரான சவுரப் நெட்ரவால்கர், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியவர். இந்த சீசனில் தான் தற்போதைய நட்சத்திர வீரர்களாக இருக்கும் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் இந்திய யு19 அணியில் விளையாடினர்.
அதன்பின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், சந்தீப் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட்டை வாழ்க்கையாக எடுத்து பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சவுரப் நெட்ரவால்கர் கார்னல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். அதன்பின் அமெரிக்கா வந்த அவர், தற்போது பணியையும் செய்து கொண்டு அமெரிக்கா அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இவர் ஆடிய யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் சவுரப் நெட்ரவால்கர் தான். அதுமட்டுமல்லாமல் யு19 2010 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசாம் விளையாடி இருந்தார். தற்போது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அமெரிக்காவுக்காக விளையாடி நெட்ரவால்கர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.