மும்பை : இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளி வந்த நிலையில், அனில் கும்ப்ளே முக்கியமான அட்வைஸ் ஒன்றை அளித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அவர் பதவியில் நீடிக்க விரும்பாததால், அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கியது. இந்த நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியின் சவால்கள் குறித்து அனில் கும்ப்ளே பேசுகையில், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படக் கூடிய தகுதி கவுதம் கம்பீருக்கு உள்ளது. ஆனால் அவருக்கு போதுமான அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். கவுதம் கம்பீர் தனது அணியை எப்படி வழிநடத்துவார் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறோம். டெல்லி அணியை வழிநடத்தி இருக்கிறார்.
ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது கொஞ்சம் வித்தியாசமானது. ஏனென்றால் பயிற்சியாளர் பதவியில் செட்டில் ஆவதற்கு கொஞ்சம் கூடுதல் நேரம் தேவைப்படும். பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் பட்சத்தில், இந்த இந்திய அணியை மட்டுமல்லாமல், எதிர்காலத்தையும் மனதில் வைத்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்திய அணியுடன் இருந்தாலும், இல்லையென்றாலும் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் தொடர்பில் இருக்கிறோம். இந்திய அணிக்கு ஒரு வீரரை கொண்டு வரும் போது, சரியான வீரரை கொண்டு வர வேண்டும். இந்திய அணியில் விளையாடும் போது வரும் அழுத்தத்தையும் விமர்சனங்களையும் சமாளிக்க கூடிய வீரராக இருக்க வேண்டும்.
சொந்த விருப்பு, வெறுப்புகளை அந்த பொறுப்பில் இருக்கும் போது காட்டக் கூடாது என்று தெரிவித்துள்ளார். பிசிசிஐ பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் அளிக்கும் தேதி மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை யார் யார் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.