மும்பை: இந்திய அணியின் நட்சத்திர இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட ஆர்வம் காட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அர்ஷ்தீப் சிங்கால் இரு பக்கம் ஸ்விங் செய்ய முடிவதாக கூறியுள்ள வாசிம் அக்ரம், அவரால் நீண்ட நாட்களுக்கு இந்திய அணியில் தாக்குபிடிக்க முடியும் என்று பாராட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அர்ஷ்தீப் சிங். 8 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனால் பலரும் அர்ஷ்தீப் சிங்கை பாராட்டி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்காக இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி இருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனென்றால் அர்ஷ்தீப் சிங் தனது பவுலிங்கில் இன்-ஸ்விங், அவுட் ஸ்விங், ஸ்லோயர் பால்கள், ஸ்லோ பவுன்சர், யார்க்கர் என்று ஏராளமான பந்துகளை வைத்துள்ளார்.
எந்த நேரத்தை என்ன பந்தை வீசுவார் என்று பேட்ஸ்மேன்களை கணிக்கவிடாமல் அர்ஷ்தீப் சிங் வைத்திருப்பதெ, அவரின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், அர்ஷ்தீப் சிங் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். திறமையான வீரர் என்று நிரூபித்துள்ளார். எனக்கு தெரிந்த வரை, ரஞ்சி டிராபி போட்டிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அவரிடம் நல்ல வேகமும், ஸ்விங்கும் இருக்கிறது.
அவரால் இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என்று இரு வகையான ஸ்விங்கையும் செய்ய முடிகிறது. அதேபோல் புதிய பந்தில் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டை வீழ்த்த முடிகிறது. இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடக் கூடிய வீரராக தெரிகிறார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். டி20 கிரிக்கெட் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். ஓராண்டில் டி20 கிரிக்கெட்டில் நமக்கான பெயரை ரசிகர்கள் மனதில் பதித்துவிட முடியும்.
ஆனால் ஒரு பவுலர் தங்களுக்கு என்று ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டுமென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றால் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கூட ரசிகர்கள் நம்மை பற்றி பேசுவார்கள். அதற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியிருக்க வேண்டும். இளம் பவுலர்கள் அந்த மனநிலையில் தான் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அர்ஷ்தீப் சிங்கிற்கு நிச்சயம் திறமை இருக்கிறது. ஒரு பவுலராக அவருக்கு 10க்கு 8 மதிப்பெண்கள் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.