ஆன்டிகுவா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தியது. டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிக போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணி என்ற பிரம்மாண்ட சாதனையை செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை முதல் 2024 உலகக் கோப்பை வரை மொத்தம் எட்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இடையே ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆக மொத்தம் ஒன்பது போட்டிகளில் தோல்வியே அடையாமல் இருந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் வரிசையில் எட்டு வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக இந்தியா (2012 - 2014) மற்றும் இங்கிலாந்து (2010 - 2012) அணிகள் தலா 7 வெற்றிகள் பெற்று இருந்தன,

வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 41 ரன்களும், தவ்ஹீத் ஹிருதோய் 40 ரன்களும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா அணியின் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவர் 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அடுத்து சேஸிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் அபார துவக்கம் அளித்தனர். இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். 6.5 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். மேக்ஸ்வெல்-லும் அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். 11.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 100 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மழையால் போட்டி தடைப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இந்திய அணியை முந்தி ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது. இரண்டு அணிகளும் ஒரு போட்டியில் ஆடி ஒரு வெற்றியை பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா இந்தியாவை முந்தி உள்ளது.