பார்படோஸ்: 2024 டி20 உலக கோப்பையில் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து - அணிகள் மோதின. 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் அணியான இங்கிலாந்தும், வலுவான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவும் மோதியதால் இந்த போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பின் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது இல்லை. இந்த நிலையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தை ஆஸ்திரேலியா முறியடித்துள்ளது.
36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 17 ஆண்டு கால பகையை தீர்த்துக் கொண்டு உள்ளது ஆஸ்திரேலியா.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடியது. இதுவரை நடந்த 2024 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் 160 ரன்கள் எடுத்தாலே மிகப்பெரிய ஸ்கோர் ஆக பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த போட்டி நடந்த பார்போடோஸ் பிட்ச் முற்றிலுமாக பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினர். இருவரும் பவர்பிளேவில் முதல் ஓவரை தவிர்த்து ஒவ்வொரு ஓவரிலும் மூன்று அல்லது நான்கு பவுண்டரிகளை அடித்து மிரள வைத்தனர். டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 34 ரன்களும். டேவிட் வார்னர் 16 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 25 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். மேக்ஸ்வெல் 25 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். மார்க்கஸ் ஸ்டோனிஸ் 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இறுதியாக மேத்யூ வேட் 10 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார். இதை எடுத்து ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் சேர்த்தது.
இந்த சவாலான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி சேஸிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஃபில் சால்ட் 23 பந்துகளில் 37 ரன்களும், ஜோஸ் பட்லர் 28 பந்துகளில் 42 ரர்களும் சேர்த்தனர். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் ஆடம் ஜாம்பா வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
அதன்பின் இங்கிலாந்து அணியால் ரன் ரேட்டை துரத்தி வெற்றி பெற முடியவில்லை. அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 10 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 7 ரன்கள், மொயீன் அலி 15 பந்துகளில் 25 ரன்கள், ஹாரி புரூக் 16 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தனர் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து ஆஸ்திரேலியா 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இங்கிலாந்து அணி குரூப் "பி" பிரிவில் சிக்கலில் உள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். ஏற்கனவே, இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் பின்னடைவை சந்தித்து உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது. மீதமுள்ள இரண்டும் போட்டிகளில் நமீபியா மற்றும் ஓமன் அணிகளை இங்கிலாந்து அணி வீழ்த்தினாலும் ஸ்காட்லாந்து அணியுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் போட்டி போட்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. .