செயின்ட் லூசியா: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று வெற்றி பெற்றது. அதனால், சூப்பர்
8 சுற்றுக்கு முன்னேறுவோமா? இல்லையா? என்ற பதற்றத்தில் இருந்தது இங்கிலாந்து அணி.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்று இருந்தன. இதில் ஆஸ்திரேலியா அணி தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது.

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோத இருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அதன்பின் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அடுத்து நமீபியா மற்றும் ஓமன் அணிகளை இங்கிலாந்து அணி வீழ்த்தினாலும் குரூப் பிரிவின் புள்ளிப் பட்டியலில் ஸ்காட்லாந்து அணியுடன் போட்டி போட்டு தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும் என்று நிலையில் இருந்தது.
ஸ்காட்லாந்து அணியும் ஓமன் மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு சமமாக 5 புள்ளிகளை பெற்று இருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
அப்படி நடந்தால் இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். மறுபுறம் 142 ஆண்டு கால ஆஷஸ் பகையாளியான ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள், ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடைவோம் என வேடிக்கையாக பேட்டி அளித்து இருந்தனர். அதன் மூலம் இங்கிலாந்து அணியை நாங்கள் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றுவோம் என ஆஸ்திரேலிய வீரர்கள் கிண்டல் அடித்திருந்தனர்.
ஒருவேளை ஆஸ்திரேலியா உண்மையாகவே ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடையுமோ என்ற பீதி இங்கிலாந்து அணியிடம் இருந்தது. இந்த நிலையில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. ஸ்காட்லாந்து அதிரடி ஆட்டம் ஆடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தது.
அதை பலரும் சுட்டிக்காட்டி இங்கிலாந்து அணியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியா வேண்டுமென்றே மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி ஸ்காட்லாந்து அணியை ரன் குவிக்க வைத்ததோ என்ற சந்தேகம் எழுந்தது. அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போதும் விக்கெட்களை இழந்து குறைந்த ரன் ரேட்டில் ஆடி சொதப்பியது. முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து இருந்தது.
அப்போது ஆஸ்திரேலிய அணி தன் வெற்றிக்கு 10 ஓவர்களில் 107 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் அபாரமாக ஆடினர். டிராவிஸ் ஹெட் 49 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 29 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து 17வது அவரின் முடிவில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த டிம் டேவிட் தன் பங்கிற்கு 14 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா. அப்போது நிச்சயம் இங்கிலாந்து அணி பதற்றத்தின் உச்சியில் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஒற்றை ரன்களாக ஒடிய ஆஸ்திரேலிய வீரர்கள் வேட் மற்றும் டேவிட் மொத்தம் நான்கு ரன்கள் சேர்த்தனர்.
நான்காவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார் டிம் டேவிட். 19.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இங்கிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் ஸ்காட்லாந்து அணியை முந்தி இரண்டாம் இடம் பிடித்து சூப்பர் 8-க்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று தனது பரம எதிரியான இங்கிலாந்தை பீதி கொள்ள வைத்து பழி வாங்கியது ஆஸ்திரேலியா.