மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் இன்று அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்திய அணி லீக் சுற்றில் வெற்றி பெற்றால், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும்.
இந்த நிலையில் இந்தத் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், இந்தியா தங்களை பழிவாங்க விரும்பும் என்று கணித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மீண்டும் இறுதிப் போட்டியில் மோதினால் அது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்தியாவில் அனைவரும் இதை நிச்சயம் விரும்புவார்கள். ஏனென்றால் கடந்த இரண்டு இறுதிப் போட்டியிலும் என்ன நடந்தது என்பதை பார்க்கையில் நிச்சயம் இந்தியா அதற்கு பழித் தீர்க்க விரும்பும் என்று நினைக்கின்றேன். அப்படி மட்டும் நடந்தால் நிச்சயம் ரசிகர்களின் ஆரவாரம் இருக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில் என்ன முடிவு வரும் என்பதை பார்க்க நான் ஆவலுடன் இருக்கின்றேன்.
அப்படி நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ரோகித் சர்மா தன்னுடைய பார்மை குறித்து நிச்சயம் கவலைப்பட மாட்டார். அவர் சிறப்பான ஒரு தலைவராக இந்திய அணிக்கு இருக்கின்றார். இந்திய அணியில் எனக்கு தெரிந்து எந்த பிரச்சனையும் இருப்பது போல் தெரியவில்லை. ஒரு நல்ல கேப்டன் கைகளில் தான் இந்திய அணி இருக்கின்றது.
இந்த தொடரில் இன்னும் நான்கு, ஐந்து அணிகள் இருக்கிறது. அவர்கள் நிச்சயம் அதிரடி ஆட்டத்தை தான் இந்த தொடரில் விளையாடுவார்கள் என்று அவர் கூறினார். பயிற்சி ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் பங்கேற்காத நிலையில் லீக் சுற்று தொடக்கத்தில் டேவிட் வார்னருடன் டிராவிஸ் ஹெட் விளையாடுவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் நாளை காலை 6 மணிக்கு ஓமனுக்கு எதிராக விளையாடுகிறது.