டல்லாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஒரு புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் கடுமையாக தடுமாறியது. குறிப்பாக அமெரிக்க வீரர்கள் ஸ்பைடர் மேன் போல் பாய்ந்து பாய்ந்து கேட்சுகளை பிடித்தார்கள். இதனால் பாகிஸ்தான அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

தொடக்க வீரர் முகமது
ரிஸ்வான் 9 ரன்களிலும், உஸ்மான் கான் மூன்று ரன்களிலும், பக்கர் சமான் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபர் அசாம்,சதாப்கான் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.
இதில் பாபர் அசாம் வழக்கம் போல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் சதாப் கான் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் பாபர் அசாம், 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் பாபர் ஒரு புதிய சாதனையை படைத்தார்.
அதாவது சர்வதேச t20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் தற்போது முறியடித்து இருக்கிறார். விராட் கோலி 118 டி20 போட்டிகளில் 4038 ரன்கள் அடித்திருந்த நிலையில் பாபர் அசாம் தற்போது 4067 ரன்கள் எடுத்திருக்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அந்த போட்டியில் மட்டும் விராட் கோலி நன்றாக விளையாடி இருந்தால் இந்நேரம் தன்னுடைய முதல் இடத்தை அவர் காப்பாற்றிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் இரு அணிகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் பல பரிட்சை நடத்துகிறது. அதில் பாபர் அசாம் சாதனையை மீண்டும் விராட் கோலி முறியடிப்பாரா இல்லை பாபர் அசாம், தன்னுடைய ரன்கள் வித்தியாசத்தை அதிகப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.