மியாமி : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில் சமீபிரதாய ஆட்டமாக பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இழந்த பெருமையை மீட்கும் முயற்சியில் பாகிஸ்தான் வீரர்கள் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கு டாஸ் போடும்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா,பாபர் அசாமியை கிண்டல் செய்யும் விதமாக கேள்வி கேட்டார். சமீபிரதாய ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டிக்கு எந்த மாதிரி தயாராக இருக்கிறீர்கள் என்று அவர் கேட்டார். தம்மை கிண்டல் செய்கிறார்கள் என்பதை உணர்ந்த பாபர் அசாம், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதில் கூறினார்.
தொழில் முறை கிரிக்கெட் வீரராக நீங்கள் அனைத்து போட்டிக்கும் ஒரே மாதிரியாக தான் தயாராக வேண்டும். இது முக்கியமான ஆட்டம் சமிபிரதாய ஆட்டம் என்றெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அனைத்து அணிகளையும் நாங்கள் ஒரே மாதிரியாக தான் கருதுகிறோம். இன்றைய நாளில் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற முயற்சி செய்வோம்.
இன்றைய ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. இதனால் டாஸ் வென்று முதலில் பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்வோம் என்று பாபர் அசாம் பதிலளித்தார். சொன்னதைப் போலவே பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வருகிறது. அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. அயர்லாந்து அணி மூன்று ஓவர்கள் முடிவிலே 15 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து இருக்கின்றது.